Thursday 21 September 2017

உன் நினைவுகள்..!


உன் நினைவுகளை
மலைமேல் மறைத்து வைத்திருந்தாலும் 
அருவியாக கொட்டியிருப்பாய்..!

உன் நினைவுகளை
கடலினுள் கரைத்திருத்திருந்தாலும்
அலையின் நுரையாய் வெளிப்பட்டிருப்பாய்..!

உன் நினைவுகளை
வானத்தில் விதைத்திருந்தாலும்
விண்மீனாய் மின்னிருப்பாய்..!

உன் நினைவுகளை
பனை மரத்திற்கு உரமாக்கிருந்தாலும்
நுங்கில் நீராய் இனித்திருப்பாய்..!

உன் நினைவுகளை
தெரிந்தோ தெரியாமலோ
என் மனதிற்குள் புதைத்து வைத்து விட்டேன்
கண்ணீராய் கவிதையாய் கசிந்துக் கொண்டே இருக்கிறாய்..!!

Tuesday 5 September 2017

படைப்பின் நோக்கம் அறிக..!!


படைப்பின் நோக்கம் அறிந்ததினால்தான் வெட்டப்பட்ட பின்னும் துளிர் விடுகிறது மரங்கள்!

படைப்பின் நோக்கம் அறிந்ததினால்தான் தீட்ட தீட்ட ஜொலிக்கிறது வைரங்கள்!

படைப்பின் நோக்கம்
அறிந்ததினால்தான் பறிக்க பறிக்க சிரிக்கிறது பூக்கள்!

படைப்பின் நோக்கம் 
அறிந்ததினால்தான் அரைக்க அரைக்க மணக்கிறது சந்தனங்கள்!

படைப்பின் நோக்கம்
அறிந்ததினால்தான் தன்னுயிர் மாய்ந்த பின்னும் பிறர் தட்டில் உணவாகிறது பிராணிகள்!

படைப்பின் நோக்கம்
அறியாததினால்தான் சோதனைக்குள்ளாக்கப்படும்போது சோர்ந்து போய் விடுகிறார்கள் மனிதர்கள்.!