Monday 28 December 2015

பாறை..!!

என்றாவது ஒரு நாள் அருவியால் தழுவப்படுவோமெனும் நம்பிக்கையில்தான்
வெயிலினில் காய்ந்துக் கொண்டிருக்கிறது
பாறைகள்..!!

     

Sunday 27 December 2015

கொசு..!

பேராசைக் கொண்ட கொசுக்கள் தான்
தேநீர் குவளையில் மூழ்கிச்சாகிறது..!

     

Friday 25 December 2015

அகல்விளக்கு !

காற்றுடன் போராடித்தான்
இன்னொருவருக்கு வெளிச்சம் கொடுக்கிறது
அகல்விளக்கு !

    

Wednesday 9 December 2015

ஆழம்...!!

ஆழ்கடலில் அலைகளில்லை என்பதினால்
அவ்விடத்தில் ஆழமில்லை என்று
அர்த்தமில்லை !

அதுபோலவேதான்
அறிவாளிகளின்  மௌனங்களும்!!

     

Sunday 6 December 2015

முகமூடி !

இன்னொருவரின் முகமூடி
எனக்கெதற்கு..!?

எனக்கென்று
ஓர் முகம் இருக்கையில் ...!!

     

Wednesday 2 December 2015

எழுத்தேற்றம்..!!


எழுத்தேற்றம் வைத்துதான்
நானும் இரைக்கிறேன்!

என் உள்ளக்கிணற்றில் நிரம்பிடும்
சிந்தனைகளை..!!

அச்சிந்தனைகள் மழையாகப் பொழிந்தாலாவது
பருவ காலத்தில் வந்து ஓய்ந்திடும் என நானும் ஒதுங்கிடுவேன் !

ஆனால் அதுவோ ஊற்றாக அல்லவா
பீறிடுகிறது!

இரைக்க இரைக்க ஊருகிறது!

இரைக்காதிருந்தால்
என்னை மூழ்கடிக்கிறது!

நானும் என்ன செய்ய..!?

அடுப்போடும் நெருப்போடும்
பிழைப்போட்டும் எனக்கு எழுதுவது தேவையில்லை தான்..!!

ஆனாலும்
நான் மூர்ச்சையாகி விடாமலிருக்க
எழுத்தேற்றம் கொண்டு இரைப்பதை விட
வேறு வழியில்லை..!!

     

Friday 27 November 2015

நெருப்பு..!!

நெருப்பைத் தின்று
வாழ்வதைப் போன்றது..!!

நினைவுகளை சுமந்து
வாழ்வதென்பது ..!!

    

Monday 23 November 2015

ரணம்!

எழுதுவது சுகம்!
எழுதிடாதிருப்பது ரணம்!

ரணமும் தேவைப்படுகிறது
சுகம்தனை முழுமையாக உணர...!!

     

Wednesday 18 November 2015

சோக சுகம்..!!

சோகம்தனை சுகமாகவும்
சுகம்தனை ரணமாகவும் அனுபவித்து
உணரலாம்!

கவிதை எழுதுகையில் !

 

Saturday 14 November 2015

வெப்பக் காதல்..!!

கதிரவனுக்கும்
மண்ணிற்கும் நடந்த வெப்பக் காதலால்!

பிரசவிக்கிறது
குளிர்விக்கும் மழலைகளாய்
மழைத்துளிகள் .!

   

Tuesday 10 November 2015

வியர்வை..!!

சோம்பேறிகளின்
வாசனைத் திரவியங்களை விட!

உழைப்பாளிகளின்
வியர்வைத்துளிகள் சிறந்தது!!

      

Monday 9 November 2015

விருட்சங்கள் !

விலங்கினங்களின்
எச்சங்களைப் பொருட்படுத்துவதில்லை!

"விருட்சங்கள்"!

   

Sunday 1 November 2015

நிராசை...!!(குட்டிக்கதை)

   
  "எத்தன தடவ சொன்னேன்..?நான்
அங்கேயே இருந்துக்குறேன்..ஏதாவது வேல செஞ்சிக்கிட்டு இருந்துக்குறேன் னு,யார் கேட்டீங்க..மலேசியாப் பொண்ணு னு கட்டி வச்சீக..ஒங்களுக்கு எந்தம்பி மலேசியாவுல இருக்கான்,எம்மவன் மலேசியாவுல இருக்கான் னு "பவுசி" பண்ணனும்,அப்புறம் கைலி தாவாணி கொடுத்து விட ,நான் இங்கே இருக்கனும்.ஒம்மவன் இங்கே வர விசா ஏற்பாடு செய்ய ஆளு வேணும்,இப்படி ஒங்க ஆசைக்கெல்லாம் என்னை இங்கே தள்ளி விட்டீங்க.....என் ஆசையில மண்ணள்ளி போட்டுட்டு.இப்ப என்ன ஊருக்கு வா ,ஊருக்கு வா னு அழுவுறீங்க....என்னால ஒடனே கெளம்பி வர முடியாது....உம்மா "மவுத்தா" போனா நான் என்ன செய்ய..!? தூக்கி அடக்கம் பண்ணுங்க...நான் வர முடியாது"என ஊரிலிருந்து,தன் தாய் மரணச் செய்தியைச் சொன்ன தன் அக்காவைத் திட்டு விட்டு ,

"அபாங்.., மோ ஆப்பா...!? என தன் மாமனார் உணவகத்தில் வேலையைத் தொடர்ந்தான் மலேசியாவில்யூசூப்.

        

Tuesday 27 October 2015

பூங்கொத்துதான்!

உன்னை மகிழ்விக்க
நான் தரும் பூங்கொத்துதான்!

"கவிதை"!

       

Monday 26 October 2015

கண்ணீர்..!


கண்கள் எழுதிடும்
ஓர் உணர்வுக் கவிதை!

"கண்ணீர்"

    

Sunday 18 October 2015

தகிக்கிறேன் நான்!


வெளிச்ச ஆடையை களைந்து விட்டு
கருப்பு நிற ஆடையை அணிய ஆயத்தமான வானம் !

நீள் மரங்களிடையில் சிதறிய
ஒளிக்கீற்றுகள்!

கொலுசுக்கட்டி நடந்திடும் நீரோடை!

பச்சைப் போர்வையை போர்த்திக் கொண்ட மலைகள்!

பசியோடு பறந்து சென்று வயிறு நிறைந்து
கூடு திரும்பும் பறவைகள்!

காற்றுடன் காதல் பேசும் பூக்கள்!

பூவிதழில் தேன் குடித்துக்கொண்டே சிறகசைக்கும்
பட்டாம்பூச்சிகள் !

இப்படியான காட்சிகளை கவிதைகளாக 
காணும்
இத்தருணத்தில் தகித்துதான் போகிறேன்!

பிடித்தமான ஒரு கவிதைப் புத்தகத்தினை 
பிரித்து படிக்கவா !?

இல்லை!

பிரியமானவளே உன்னை நினைத்து
ஓர் கவிதை எழுதிடவா !? என்று!

        

Wednesday 14 October 2015

ஒவ்வொரு பூவிலும் ஓர் வாசமாகிட உண்டு.!


         இறைவன் படைத்தப் படைப்புகளில் ,ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு தனித்தன்மையுண்டு.ஒவ்வொரு மலரிலும் வெவ்வேறு வாசங்கள் இருப்பதைப் போல,ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் வெவ்வேறு திறமைகள் உள்ளது.ஆனால் மனிதர்களாகிய நாமோ,அடுத்தவரிடம் உள்ள கூலாங்கற்களைக் கூட ,பெரும்சாதனையாக பார்க்கும் நாம்,நம் கையிலிருக்கும் முத்துக்களை கவனிப்பதில்லை .இப்படியாக நாம் பார்க்க தவறிய ,உணர மறுத்த,மறந்திட்டவற்றில் ஒன்று.நம் பிள்ளைகள் .

        குழந்தையாக நம் பிள்ளைகள் இருந்திடும்போது ,கண்ணே ,மணியே என்று கொஞ்சும் நாம் ,வளர வளர ,நம் பாசத்திற்கு ஒரு திரைப் போட்டுக் கொள்கிறோம்.ஆம்!அக்குழந்தைகள் படிப்பிலோ,மற்றவற்றிலோ சிறப்பாக செய்ய முடியாவிட்டாலும் ,முடிந்தளவிற்கு வெற்றிகளையோ,மதிப்பெண்களையோ பெற்று வருகையில்,அக்குழந்தையை நாம் ஆதரிப்பதில்லை,அடுத்து இன்னும் சிறப்பாக செய்ய மாற்று வழிகளை அக்குழந்தைகளுக்கு காட்டுவதில்லை .ஆனால் முழு பழியையும் குழந்தையின்மேல் சுமத்திவிட்டு நாம் தப்பித்துக் கொள்கிறோம்.அதே வேளை குழந்தைகள் தவறு செய்துவிட்டாலோ,அதனால் வரும் கோபத்தை அடியாகவோ,வசைச்சொற்களாகவோ தாராளமாக பயன்படுத்தி குழந்தைகளெனும் காகிதத்தை கிழித்து எறிந்து விடுகிறோம்.


          குழந்தைகளைப் "பச்ச மண்ணு"என சொல்வார்கள் .அதனை காரணமில்லாமல் சொல்லவில்லை ,நம் முன்னோர்கள்.ஆம்!ஈரமான மண்ணை மண்பாண்டங்களாக வடிவமைத்து ,பயன்படானதாக ஆக்கிடுவது குயவன் பொறுப்பைப் போலவே,நம் பிள்ளைகளை ,மனித சமூகத்திற்கு பயன்பாடான குழந்தைகளாக வளரச் செய்வது ,வாழச் செய்வது நம் பொறுப்பாக உள்ளது.அதனைச் செய்திடாமல் ,பக்கத்து வீட்டு பசங்களோட ,நம் பிள்ளைகளை ஒப்பிட்டுப் பார்த்து திட்டித் தீர்க்காதீர்கள்.பக்கத்து வீட்டு பெற்றோர்கள் சமூக அந்தஸ்துள்ள மருத்தவராகவோ,பொறியியலாளராக இருக்கும் பட்சத்தில்,நம் பிள்ளைகள் நம்மை பார்த்து "நீங்க ஏன் அவர்களைப்போல"!?இல்லையென கேள்வி எழுப்பினால்,நம் முகத்தை நாம் எங்கே வைத்துக் கொள்ள முடியும்.ஆதலால் தான் சொல்கிறேன்.
"ஒவ்வொரு பூவிலும் ஓர் வாசம் உண்டு!ஒவ்வொரு உயிர்க்குள் ஓர் திறன் உண்டு!!"

     

Monday 12 October 2015

கலங்கிடத் தேவையில்லை...!!


     "இந்தியா எங்கள் தாய் நாடு!இந்தியர்கள் அனைவரும் என் உடன் பிறந்தவர்கள்!என் தாய்த் திருநாட்டை நான் உளமாற நேசிக்கிறேன்......""என பள்ளிக்கூடத்தில் உறுதி மொழி எடுக்கையில் ,நெஞ்சில் ஓர் இனம்புரியாத சந்தோசமும் ,தன்னையறியாமலே நெஞ்சு நிமிர்ந்து ஒரு கம்பீரம் தெரியும்,உடலிலும்,முகத்திலும்.கால ஓட்டத்தில் சுதந்திரகாலப் போராட்டங்களை படிக்கையிலும்,ஒரு இருமாப்பும் உண்டானது, சுதந்திரப் போராட்டத் தியாகளிகளான பகதூர் ஷா,நேதாஜி ,காந்தி போன்றவர்களின் வரலாற்றைப் படித்து அதனுள் பயணிக்கையில் .இப்படியாக இந்தியா என்றாலோ,இந்தியன் என்றாலோ ,ஒரு "கெத்து"மனதினுள் ஊடுவும்.மூன்றுப் பக்கமும் கடலாலும்,தலையில் பனிமலையுடனும் காட்சி தரும் அழகான தேசம்.பல நிற,இன,மொழிகள் பேசும் மக்களைக் கொண்ட அற்புதமானது தேசம்தான் இந்தியா.

      
        இப்படியாக எத்தனையோ ,பெருமைகள் கொண்ட இந்தியாவிலோ,மாட்டிறைச்சி தின்பது கூட மரணத்தண்டனைக்குரிய செயலானதாக பார்க்கப்படுகிறது ,பேசப்படுகிறது ,சில கயவர்களால்.மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியாவே முதலிடம் என பெருமையாக பேசிக்கொண்டு,இன்னொருப் பக்கம் உள்நாட்டு மக்கள் உண்பது மாபாதகமாக காண்பிக்கப்படுகிறது.இப்பாசிசவாதிகள் ஏதோ இஸ்லாமியர்களுக்கு மட்டும்தான் ஆபத்தானவர்கள் என சிலர் மனப்பால் குடித்தார்கள்.ஆனால் இன்று பல்வேறான சம்பவங்கள் ,இந்த பாசிசவாதிகள் இந்திய இறையாண்மைக்கே எதிரானவர்கள் என சாமானிய இந்திய மக்களும் உணரத் தொடங்கி விட்டார்கள்.விவசாயிகளுக்கு எதிரான நில அபகரிப்பு சட்டம், கருப்பு பண விவகாரம்,கோயிலுக்குள் நுழைந்த தலித்
முதியவர் கொலை,புகார் அளிக்கச் சென்ற தலித் குடும்பத்தினர் நிர்வாணப்படுத்தப்பட்ண அவலம்,இப்படியாக நடக்கும் சம்பவங்கள் இந்தியா ,கற்காலத்திற்கு சென்று விட்டதோ என அச்சப்பட வைக்கிறது.

        இத்தனை வகையான அநீதிகள் நடக்கிறதே,நம்மால் என்ன செய்திட முடியும் என கலங்கி நிற்கத் தேவையில்லை,நம்மால் முடியுமா !?என மலைத்து நிற்கவும் தேவையில்லை.நம் இந்திய தேசத்தில் ஜனநாயக முறையில் போராடுவதற்கு ,வழிவகைகள் உள்ளது,அப்போராட்டங்களை எஸ்.டி.பி.ஐ போன்ற கட்சிகள் முன்னெடுத்துச் செல்கின்றது.நாம் செய்ய வேண்டிய கடமையானது ,ஜனநாயக வழியில் போராடும் அவர்களோடு கைக்கோர்ப்தேயாகும்.ஆம் !நாம் நம் பாரதத்தை காத்திட வேண்டும்.அனைத்து சமுதாய மக்களும் சம உரிமையாக வாழ்ந்திட நாம் அரசியல் அதிகாரத்தை அடைந்திட வேண்டும்."ஓடாத மானும் !போராடாத மக்களும் வாழ்ந்ததாக சரித்திரமில்லை"என ஓர் கவிஞன் சொன்னான்.ஆதலால் எதற்காகவும் கலங்கிட ,தயங்கிட தேவையில்லை,போராட்டக்குணம் நம்மிடையே இருக்குமேயென்றால் ........!!

        

Thursday 8 October 2015

எஸ்.டி.பி ஐ ன் வெற்றி.!


       எஸ்.டி.பி.ஐ ஆரம்பிக்கப்பட்ட காலகட்டத்தில்,"ஏம்பா !?ஒங்களுக்குத் தேவையில்லாத வேல.." "இருக்குற கட்சி பத்தாதா !?நீங்க வேறயா "என்றும்,
அரசியல் "ஹலாலா !?ஹராமா..!?என்றும் ,பல்வேறான கருத்துக்களும்,விமர்சனங்களும்,ஏன் அவதூறுகள் கூட சுமத்தப்பட்டது.ஆனாலும் அக்கட்சியின் ஆரம்ப கால தலைவர்களிடம் ,நீண்ட தூர தொலைநோக்குப் பார்வை இருந்தது .அவர்களது உறுதியான நிலைபாடுகளில் ,அவர்களிடம் சரியான திட்டமிடலினாலும்,கட்சி வளர்ந்துக் கொண்டேச் சென்றது.இன்று இந்தியாவெங்கிலும் எஸ்.டி.பி.ஐ கொடியினை காண முடிகிறது.

    இக்கட்சியின் போராட்டங்கள் பன்முகத்தன்மை கொண்டது.விலைவாசி உயர்வு,மது ஒழிப்பு,தலித் சமூகத்திற்கெதிரான கலவரங்கள்,இலங்கையில் நடந்த இனப்படுகொலை ,இப்படியாக போராட்டங்கள் நடத்தியது இக்கட்சி.ஈழப் படுகொலையின்போது,காங்கிரஸும்,பா ஜ க வும் நீலிக்கண்ணீர் வடித்துக் கொண்டிருந்த வேளையில்,"நாங்கள் தான் தமிழ் மக்களின் பாதுகாவலர்கள்"என சொல்லிக் கொள்ளும் திராவிடக் கட்சிகள் தமிழக அளவில் போராட்டங்கள்,அறிக்கைகள் என சுருக்கிக் கொண்டது.ஆனால் அதே வேளையில் எஸ்.டி.பி.ஐ டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தியது,என்னைப் போன்ற மனிதத்தை நேசிப்பவர்களுக்கு ஆறுதலாக இருந்தது .பெருநாள் சந்திப்பு விழாவின் போது மு.க.ஸ்டாலின் அவர்கள்"எஸ்.டி.பி.ஐ ன் வளர்ச்சி பொறாமைக் கொள்ளச் செய்கிறது "என்று சொன்ன வார்த்தை ,எஸ்.டி.பி.ஐ ன் வளர்ச்சியை பறைசாற்றுவதாகவே உள்ளது.

      இந்த வேளையில்தான் ,இராமநாதபுரம் மாவட்டம்,வாலிநோக்க மக்களின் போராட்டத்தை உற்றுக் கவனிக்க வேண்டியுள்ளது .இம்மக்கள் கடல் அலைகளையும்,கடற்கரை உப்புக்காற்றையும் எதிர்த்து உழைக்க தயங்காத எம் சொந்தங்கள்,அம்மக்கள் உரிமை வேண்டி போராட்டக்களத்தில் நிற்பது ஆச்சரியமும்,அதிசயமாகவும் உள்ளது.ஆம் அவர்களுள் போராட்டக்குணத்தை விதைத்து,உரிமைகளை வென்றெடுக்க ஜனநாயகத்தின் வழிமுறையைக் காட்டி ,வழி நடத்தும் எஸ்.டி.பி.ஐ கட்சியைப் பாராட்டியேத் தீர வேண்டும். ஏனென்றால் போராட்ட அரசியல் நடத்தும் அரசியல் கட்சி,போராடும் மக்களை உருவாக்குவதுதான்,முதல் வெற்றி. அவ்விசயத்தில் எஸ்.டி.பி.ஐ வெற்றியடைந்துள்ளது.

"வாழ்த்துக்கள் !வாலிநோக்கம் மக்கா...!!

    

Tuesday 6 October 2015

டிஜிட்டல் இந்தியா.!


இணையத் தொடர்பு புகழப்படும்!
ஏழை வயிற்றுப் பசி மறக்கப்படும்!

தாய்மார்களின் கற்புகள் கலவரத்தில் கிழித்து எறியப்படும்!
தாயைப் பற்றி கேட்டதும் கண்ணீர் மல்கும் காட்சிகள் போற்றப்படும்!

மாட்டுக்கறி புசிக்க தடையுள்ளது!
மனித கறிகள் கூறு போடப்படுகிறது !

இரவுக்கேளிக்கை விடுதிகள் உடைக்கப்படும்!
அந்நிய நாட்டில் பெண்ணை கட்டியணைப்பது பிரமதர் என்றால் சாதனையாக்கப்படும்!

பாகிஸ்தானிலிருந்து தாவுது இப்ராஹிம் தர தர வென இழுத்து வரப்படுவார் என தேர்தலின்போது முழங்கப்படும்!
பிறகு வெங்காயம் இறங்குமதியை சாதனையென சொல்லப்படும் !

உங்களுக்கு கொலைவெறி கோபம் வர வேண்டுமா.!?
இல்லை வயிறு வலிக்க சிரிக்க வேண்டுமா !?

இந்திய அரசியலை கொஞ்சம் ஆழ்ந்து 
யோசித்துப் பாருங்கள்!
அடைந்திடலாம் அவ்வின்பத்தை!

இது தான் 
எங்கள் டிஜிட்டல் இந்தியா.!

     

Saturday 3 October 2015

பாவம் அந்த மாடுகள்!


     உழைப்பிற்கும் ,சாந்ததிற்கும் பெயரின் பிராணியான மாடு தான் இன்றைய இந்தியாவில் "ஹாட் டாபிக் ". ஒரு முறை கர்ம வீரர் காமராசர் அவர்கள்,காரில் சென்றுக் கொண்டிருக்கையில் ,ஒரு கிராமத்துவாசி,காரை மறைத்து கேட்டாராம்,காமராசரிடம் "அய்யா.!சுடுகாட்டிற்கு செல்ல வழி அமைச்சி தாங்க"னு கேட்டார்.அதற்கு காமராசர் சிரித்துக்கொண்டே சொன்னாராம்,"நான் "இருக்குறவங்கள"ப் பத்தி கவலைப் படுறேன்.!நீங்க "போறவங்கள"பத்தி கவலைப் படுறீங்க"னு சொன்னாராம்.ஆம் !அய்யா காமராசர் அவர்கள் மனிதர்களின் வாழ்வை உற்று நோக்கினார்.அவர்களது வாழ்வை முன்னேற்ற, வாழ்நாளை கரைத்தார்.ஆனால் இன்று மனிதம் மறந்த மாக்களோ ,மாடுகளைப் பற்றி பேசி,மனிதர்களைக் கொள்கிறது மதங்களைச் சொல்லி. 

        மாட்டு இறைச்சியினை உணவாக உட்கொள்வது,இஸ்லாமிய சமூகத்தின் கட்டாய கடமையில்லை.அது அச்சமூகம் சாப்பிடும் உணவுகளில் ஒன்று,இதில் வேடிக்கை என்னவென்றால் இச்சமூகத்தில் மாட்டிறைச்சியை வாழ்நாளில் தொட்டுக்கூட பார்த்திடாதவர்கள் ஏராளமாக,தாராளமாகவும் உள்ளனர்.அதேவேளையில் மாட்டிறைச்சி நாள் தவறாமல் சாப்பிடும் பிற சமூகத்தினரும் உள்ளனர்.ஆனால் இஸ்லாமிய சமூகத்தை முன்னிறுத்தியேதான் இங்கே பேசப்படுகிறது .அதேப்போல் சில நாட்களுக்கு முன் குர்பானிக்கு கொண்டு ச் செல்லப்பட்ட பிராணிகளைத் தடுத்த "ப்ளு க்ராஸ்"அமைப்பினர்.,இவ்வமைப்பினர்களுக்கு என்ன பிரச்சனை என தெரியவில்லை .பிற உயிர்களை காப்பாற்றுகிறார்களாமாம்,அய்யோ அய்யோ !எங்கே இருந்துதான் வருகிறார்களோ இப்படி, !? வருடத்திற்கு ஒரு முறை தான் குர்பானி ,அந்த இறைச்சி கூட ஏழைகளுக்கே பெரும்பான்மையாக பகிரப்படுகிறது ,ஆனால் தினந்தோறும் ஆடு,மாடு,கோழிகளை அறுத்து ஏற்றுமதி செய்திடும் பெரும்தொழில் நிறுவனங்களுக்கு எதிராக என்ன செய்தார்களோ !?.பிற உயிர்களை கொல்ல விரும்பாத "ப்ளு க்ராஸ் "அமைப்பினரே நீங்கள் இனி "ஷாம்பு"தேய்த்துக் குளிக்காதீர்கள் .ஏனென்றால்  உங்கள் தலையில் வளரும் பிற உயிர்களான "ஈரும்,பேனும்"சாகிறதால்.

     "குடிவெறி"யர்கள் "கல்யாணம்"நடந்தாலும் ,"கருமாதி"விழுந்தாலும் குடிப்பார்கள்.அவர்கள் காரணங்களுக்காக குடிக்கவில்லை,குடிப்பதற்காக காரணங்களைத் தேடுகிறார்கள்.அதுப்போல ரத்தவெறியர்களாக இப்பாசிசவாதிகள்,அவர்கள் 1992 ல் ரத்தம் குடிக்க ,ராமரும்-பாபரும் தேவைப்பட்டார்கள்.2002 ல் குஜராத் கலவரத்திற்கு சபர்மதி தீப்பற்றியது,காரணமாக இருந்தது.இப்பொழுது மாட்டை வைத்து மனிதத்தைப் புதைக்கிறார்கள்.புற்பூண்டுகளை சாப்பிட்டு வளரும் மாட்டின் பெயரைச் சொல்லி மனித ரத்தங்களை ஓட்டாதீர்கள்."பாவம் அந்த மாடுகள்".

     

சண்டியர்.!(சிறுகதை) (2)


           அஜீஸைப் பற்றி கொஞ்சம் பார்த்திருவோம்.இவன் தகப்பனார் சிங்கபூர் குடியுரிமை பெற்றவர்.இவன் இங்கே பிறந்து ,ஏழு வயது வரை இங்கேதான்  வாழ்ந்தான்.பிறகு தன் தாயுடன்,சிங்கபூர் சென்றான் தன் தகப்பனார் முயற்சியில் ,அப்படியே படிப்படியாக சிங்கபூர் குடியுரிமை பெற்று விட்டான்.ஐந்தாறு வருடத்திற்கு ஒரு முறை பிறந்த ஊருக்கு வந்து,சில மாதங்கள் தங்கி விட்டுப் போவான்.அப்படித்தான் இந்த முறையும் வந்திருந்தான்.சலீமுடன் அவனுக்கு ஒரு இடைவெளி,எப்போதும் இருக்கும்,அது ஏனென்று இருவருக்குமே தெரியாது.ஆனாலும் எங்காவதுப் பார்த்துக் கொண்டால்,ஒரு பார்வை பார்த்துக் கொள்வார்கள்,இல்லையென்றால் ஒதுங்கியே போய் விடுவார்கள் .இப்போது தன் சின்னம்மா மகன் மீராசாவை அடித்து விட்டான் என்பதில் கோபமானான்.அந்த கோபத்தை கூட சுற்றப் போனவர்கள் ,அணைந்திடாமல் எரிய வைத்திருந்தார்கள்.


          ஊருக்கு வந்த அஜீஸ்,நேரடியாக சலீமுடன் மோதிக்கொள்ளாமல்,சாடையாகப் பேச ஆரம்பித்தான்.அவன் ,இவனைத்தான் பேசுகிறான் என்பதை சலீம் புரிந்துக் கொண்டான்."நேரே வந்து வம்பு பண்ணு..அப்போ இருக்கு ஒனக்கு"என சலீம் கொதித்துக் கொண்டிருந்தான்.

       சில நாட்களில் கீழக்கரை மணல் மேட்டில் கைப்பந்துப் போட்டி பெரிய அளவில் நடத்த இருப்பதாக ,தகவல் வந்திருந்தது.அதுவரைக்கும் "சும்மா"இருந்த மருதநாயகம் திடல்,பரபரப்பானதாக மாறிப் போனது.தினமும் கைப்பந்துப் பயிற்சி தான்,சலீமிற்கு கைப்பந்தாட ஆசைதான்.ஆனால் விளையாடத் தெரியாது.அதனால் உட்கார்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான்.பந்து ,குடிகாரனை கட்டிய மனைவியைப்போல,அடிபட்டுக் கொண்டும்,"கிழி"ப்பட்டுக் கொண்டும் இருந்தது.

      அப்போது அஜீஸ்,சலீமிடம் வந்தான்.
"வா ,கொஞ்சம் உன்கிட்ட பேசனும்" என்றான்.அதற்காகவே காத்திருந்ததுப் போல்,உட்கார்ந்து இருந்தவன் எழுந்தான்.இருவரும் திடலுக்கு அருகிலிருந்த பள்ளத்திற்கு சென்றார்கள்.அங்கு கருவேலமரங்கள் அடர்த்தியாக இருக்கும்.இருவரும் சென்றதை பந்து விளையாட்டை,உன்னிப்பாக கவனித்தவர்கள்.இவர்களைப் பார்க்கவில்லை .சில நிமிடங்கள்தான்,கழிந்திருக்கும்.அப்போது அடிபட்ட பந்து பள்ளத்தை நோக்கி ஓடிவிட்டது.அதனையெடுக்கப் போனாவன்.

"ஏய் !எல்லாரும் இங்கே வாங்கப்பா...ஒரே ரெத்தம்பா."என
அலறிக் கொண்டு,பந்து விளையாடியவர்களை அழைத்தான்.


       பந்து விளையாடியவர்கள்,
வேடிக்கைப் பார்த்தவர்கள் என எல்லோரும் ஓடிப் போய்ப் பார்த்தார்கள். சலீம் முகத்திலும்,அஜீஸ் முகத்திலும் ரத்தங்கள் அப்பிக்கொண்டும்,வடிந்துக் கொண்டும் இருந்தது.என்னமோ "முகம்மது அலி-மைக்டைசன்"என நினைப்புப் போல இருவருக்கும்,இன்னும் விடாமல் மாறி மாறி ,மூர்க்கமாக தாக்கிக் கொண்டுதான் இருந்தார்கள்.ஓடிப் போய்ப் பார்த்தவர்கள் .கஷ்டப்பட்டு இருவரையும் 
பிரித்தார்கள். அதற்குள் அவர்களது உறவுகள் வந்து ,கூட்டிச் சென்றார்கள்.அவர்களது முகம் ,அவர்களுக்கே அடையாளம் தெரிய ஒரு வார காலம் ஆகலாம்,அந்த அளவிற்கு முத்தங்களாகப் பதிந்திருந்தது குத்துக்கள்.


       "நீ என்னத்துக்கு மீராசாவை காப்பாத்த போனே.!அந்த நன்றி கூட இல்லாமல் இப்படி அடிச்சிருக்கானே.."மங்கரையான் திம்பான்"என சலீம் அம்மா ,தன் வீட்டிற்கு வந்தபின் அஜீஸைத் திட்டினாள்."ஏன்டா..!?சலீமைப் போய் அடிச்சே..அவன்தானடா மீராசாவ கூட்டி வந்தான்"என அஜீஸைத்தான் அதட்டினார்கள்.அவனது உறவுகள்.சில வாரங்கள் கழிந்தது.அஜீஸ் சிங்கபூர் பயணம் கிளம்பி விட்டான்.அதற்கிடையில் இருவரும் சந்திக்கவில்லை.

         காலம் கரைந்தோடியது. நாட்கள் வாரங்களாக,வாரங்கள் மாதங்களாக,மாதங்கள் வருடங்களாக ஓடியது.ஏழெட்டு வருடங்களானது,அதற்கிடையில் சலீமிற்கு திருமணம் நடந்து இரண்டு குழந்தைக்கு தகப்பனாகி இருந்தான்.அஜீஸ் சண்டை பிரச்சினையில் ஈடுபட்டு,சிங்கபூர் சிறையில் இருப்பதாக ,ஊருக்குள் ஒரு பேச்சு அடிப்பட்டது.

         காலம் மர்மமானது,ஆச்சர்யமானது,அது போடும் 
முடிச்சுக்கள்,மனித மூளைச் சிந்தனைக்குள் அகப்பட முடியாத நுட்பம் கொண்டது.ஆம் !சலீமின் மனைவியின் தம்பிக்கு,சிங்கபூர் குடியுரிமைப பெற்ற உறவுக்காரப் பெண்ணிற்கும் திருமணம்,சிங்கபூரில் நடைபெற இருந்தது .அதற்கு சலீம் குடும்பத்தை கட்டாயம் வரச் சொல்லி அழைத்தான்.அவசரமாக கடவுச்சீட்டு(பாஸ்போர்ட் )விண்ணப்பித்து எடுத்து,சலீமின் மனைவி பிள்ளைகள் எல்லோரும் சிங்கபூர் சென்றார்கள்.

தானும் ஒரு நாள் சிங்கபூர் செல்வேன் என கனவில் கூட நினைக்காத  சலீம் சிங்கபூர் வந்து விட்டான்.சலீம் சிங்கை வந்த ஒரு வாரத்தில்,அஜீஸ் "உள்ளே"இருந்து வெளியில் வந்து விட்டான்.

     

        புக்கிட் பாத்தோக் சமூக நிலையத்தில் இரண்டாவது தளத்தில்,உற்றார் ,உறவுகள் சூழ திருமண உடன்படிக்கை நடந்தது.ஆண்களும்,பெண்களுமாக அவ்விடம் நிரம்ப ஆரம்பித்தது.புன்னகைகளால் மின்னிக் கொண்டும் இருந்தது .வந்தவர்களில் தனக்குத் தெரிந்தவர்களிடம் ,நலம் விசாரித்துக் கொண்டிருந்தான் சலீம்.அப்போது எதிர்பாராமல் வந்தான் கல்யாணத்திற்கு அஜீஸ்.சலீமிற்கு தர்ம சங்கடமான சூழல்,கல்யாணத்திற்கு வந்தவனிடம் எப்படி முகத்தைத் திரும்புவது !?எனத் தயங்கியவனாக ,லேசான புன்னகையுடன் ,தலையாட்டினான் "வா" என.அஜீஸும் பதிலுக்கு தலையசைத்து விட்டுச் சென்றான்.


     வந்தவர்கள் ,மணமக்களைச் சந்திக்கவும்,வாழ்த்துவதுமாகவும்,விருந்துண்பதுமாக இருந்தார்கள்.சிறிது நேரம் கழிந்தது.அஜீஸ் ,சலீம் அருகில் வந்தான்.

"வா !கொஞ்சம் பேசனும் "என்றான்.

      சலீம் வந்த இடத்தில் ,பிரச்சனையானால் நல்லா இருக்காதே"என தயங்கிக் கொண்டே அவனைப் பின் தொடர்ந்தான்.இருவரும் 
முதல் தளத்திற்கு வந்தார்கள்.அங்கு உட்கார்ந்துப் பேசுவதற்காக செய்யப்பட்டிருந்த,இருக்கையில் எதிர்,எதிரே அமர்ந்தார்கள் .அஜீஸ் "மார்ல்ப்ரோ"சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தான்.பிறகு சலீம் பக்கம் ,சிகரெட்டை நீட்டினான்."நீ ஒன்னு எடுத்துக்கோ"எனும் தோனியில்.சலீம்
சொன்னான்.

"இல்ல அஜீஸ் !இப்ப இதெல்லாம் விட்டுட்டேன்."என்றான்.

"ம்ம்..."என தலையாட்டியவனாக,ஏதோ குழப்பமும் ,கவலையுமாக சிகரெட்டை இழுத்துக் கொண்டிருந்தவன்,சலீமிடம் கேட்டான்.

"கேள்விப்பட்டேன்..இப்ப "தண்ணியெல்லாம்"விட்டுட்டியாமே...ஆடம்பரமா நடக்க இருந்த கல்யாணத்த ,சிம்பிளா முடிக்க வச்சது,நீதானாமே...!?எப்ப இருந்து நீ "மாற" ஆரம்பிச்சே..."என ஒரு ஏக்கத்துடன் கேட்டான்.

   "ம்ம்...ஆமாம் .!நாம அன்னைக்கு அடிச்சிக்கிட்ட பிறகு,என் உம்மா வடிச்ச கண்ணீர் தான்.என்னால என் உம்மாவுக்கு எந்த பிரயோசனமும் இல்ல.நான் "கழிசடையா" தெரியும்போது,சொந்தங்காரவங்க கூட செத்த நாயை,பார்க்குற மாதிரி பார்த்தாங்க,ஆனா என் உம்மா என்னையத் தாண்டா ஒலகமா சுத்தி வந்துச்சி .,அப்போ தான் நெனச்சேன்,ஆடு,மாடு கூட யாருக்காவது ,எதுக்காவது பயன்படுது..ஆனா மனுசனுங்க நாம ஏன் யாருடைய கண்ணீருக்கோ,காரணமா இருக்கிறோமே னு கலங்க ஆரம்பிச்சேன்...சின்ன புள்ளயில கடமைக்கு,ஓதிப் பார்த்த குர்ஆனையும் ,நபி வாழ்க்கையையும் ,வாழ்க்கைக்கு வழி காட்டும்ங்ற ,நம்பிக்கையில படிச்சேன்.,என்னை மாத்துச்சி....""என கலங்கிய கண்களுடன் சொல்லி முடித்தான் சலீம் .

    இவன் சொன்ன வார்த்தைகள் ஏதோ ஒரு வகையில் அஜீஸைச் சுட்டது.அவன் முகம் இறுக்கமானதாக இருந்தது .அஜீஸின் தாய் சில மாதங்களுக்கு முன்னால்,இறந்திருந்தாள்.அவள் எத்தனையோ முறை ,இவனைத் திருந்தச் சொல்லி அழுது புலம்பி இருக்கிறாள்.இவன் தான் திருந்தாததுப் போனதை இப்போது எண்ணியதும்  மனம் பாரமாக இருந்தது .காலமெனும் உளி ,சலீமெனும் பாறையை செதுக்கி இருந்தது.அஜீஸை பதம்பார்த்து இருந்தது .இருவரும் கடும்தவம் போல்,பேச வார்த்தைகளின்றி அமைதியாக உட்கார்ந்திருந்தார்கள்.

        அம்மௌனத்தை கலைக்கும் விதமாக ,இஷா தொழுகைக்கான பாங்கு ,சலீம் கைப்பேசியில் கேட்டது.சலீம் எழுந்து நின்றவனாக,அஜீஸை அழைத்தான்."வா!தொழுதுட்டு வருவோம் "என.முதலில் "இல்ல ,நீ போயிட்டு வா"என்றவன்.சலீம் கையை பிடித்து இழுத்ததும்,தவிர்க்க முடியாமல் சென்றான்.

      இருவரும் அருகிலிருந்த தண்ணீர் குழாயில் "ஒளு"செய்து விட்டு ,சுத்தாமன ஒரு அறையில் ,சலீம் இமாமாகவும்,அஜீஸ் அருகில் நின்றும் தொழ ஆரம்பித்தார்கள்.தொழுகை முடிந்து சலீம் திருப்பிப் பார்க்கையில் ,அதிர்ச்சியுடன் திகைத்தான்.ஏனென்றால் அவன் தொழ ஆரம்பிக்கையில் ,அஜீஸ் மட்டும்தான் நின்றான்,பிறகு இன்னும் சிலர் சேர்ந்திருந்தார்கள்.சங்கையான பெரியவர்களும்,திருமணத்திற்கு வந்த ஹஸரத்மார்களும்.இப்பெரியவர்களுக்கு முன்னால்,நான் நின்று தொழுகை நடத்தினேனா !?என எண்ணி நெகிழ்ந்தான் சலீம்.

       பிறகு அவரவர்கள் இறைவனிடம் கையேந்தி பிரார்த்தித்தார்கள்.அப்போதை அஜீஸ் ,தொலைந்த தன் வாழ்க்கையை எண்ணி,செய்திட்ட பாவத்தை எண்ணி,இனியாவது திருந்தி வாழ ,வழி காட்டு யா அல்லாஹ் !!என ஏந்திய கைகளுக்குள், முகத்தை மறைத்து கண்ணீர் வடித்து பிரார்த்தித்துக் கொண்டிருந்தான்.

    சலீமோ,சஜ்தாவில் விழுந்தவனாக,"சாக்கடையில் விழுந்து கலந்திட இருந்த மழைத்துளி என்னை,சிப்பியில் சேர்த்து முத்தாக்கிய யா! அல்லாஹ் !என தேம்பி,தேம்பி அழுது இறைவனுக்கு நன்றி செலுத்திக் கொண்டிருந்தான் சலீம்.

வாழ்க்கை எல்லோருக்கும் ,தவறுவதற்கும் ,திருந்துவதற்கும் வாய்ப்பைத் தருகிறது .நாம் எப்படி !?என்று நம் மனசாட்சியைத் தொட்டுப் பார்த்துக் கொண்டால் நல்லது.

  (முற்றும்)

    

Wednesday 30 September 2015

சண்டியர்.!! (சிறுகதை ) (1)



       இரவு பத்தரை மணிப்போல்,சலீமின்
கைப்பேசி கத்தியது.மதுரைக்குப் போயிட்டு வந்த அசதியில்,கொஞ்சம் நேரத்தோடு கண்ணயர்ந்தவன்,கைப்பேசியை எடுத்து காதுக்குள் வைத்தான் சலீம்.

"ஹலோ..."

எதிர் முனையில் அமீர்....

"என்னண்ணே...!அதுக்குள்ளத் தூங்கிட்டியா ...!? பக்கத்து ஊர்ல ஒரு வம்பாயிருச்சி..கொஞ்சம் வா ,போயிட்டு வந்துருவோம்....

"டேய்...இன்னேரமா....!? என சலீம் கேட்டதும்.

"வேணும்னா ,காலையில சாப்பிட்டுட்டு போவோமா..!?எனக் எரிச்சலுடன் கேட்டான் அமீர்.

"ஷ்...ஷ்ஷ்.....சரி,ரோட்ல நில்லு வாரேன்..."என சொன்னவன்,சலிப்புடன் கிளம்பினான்.

வீட்டிற்கு வெளியில் நின்ற பல்சரை எழுப்ப ,சாவியை விட்டுத் திருகினான்,நான்கு தெருவைத் தாண்டிச் சென்றதும்,மெயின் ரோடு வந்தது.அங்கு ஐந்து,ஆறு வாலிபர்கள் நின்றுக் கொண்டிருந்தார்கள்.இவன் பல்சரைப் பார்த்ததும்,உட்கார்ந்து இருந்தவர்கள் எழுந்து நின்றார்கள்.உடனே எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து,"ஷேர் ஆட்டோவில்"செல்வதற்கு.பல்சரை விட்டு இறங்கியவன் கேட்டான்.

"என்னடா பிரச்சனையாம்....!?

கூட்டத்திலிருந்த அமீர் சொன்னான்,

"என்னனு சரியாத் தெரியல...."தண்ணி"யப் போட்டுட்டு பிரச்சனைப் பண்ணிருக்கான் ,மீராசா..
அவனைப் புடிச்சி வச்சிருக்கானுங்களாம்...."

"அதுக்கு நாமப் போயி பிரச்சனைப் பெருசாப் போன,நம்மள திட்டித் தீர்ந்துவாங்க..நம்ம ஊர்ல ..பெரிய ஆளு யாரையாவதுக் கூட்டிட்டுப் போவோமே...."

சலீம் சொன்னதற்கு கூட்டத்திலிருந்த இன்னொருவன் சொன்னான்..

"டேய்...பெரிய ஆளைக் கூட்டிப் போன ஊர் ஃபுல்லா தெரிஞ்சிரும்டா..நாம போயி "கமுக்கமா" பேசி,மீராசாவை கூட்டி வந்துருவோம்..."

"நீ சொல்றது சரிதான்..நாம மட்டும் போயி ,"அடிச்சிக்கிட்டா" ,அதுக்கும் நம்ம "தலய " உருட்டுவாங்களே...."

பேசிக்கிட்டு இருக்கும்போதே அமீர் போன் அடித்தது.போனில் எடுத்துப் பேசுவதற்கு முன்னால் சொன்னான்.

"கொஞ்சம் இருங்கப்பா .."அங்கே" இருந்துதான் ,போன் பண்ணுறானுங்க.."எனச் சொல்லிக் கொண்டே கைப்பேசி அழைப்பை ஏற்றான்.எதிர்முனையில் இருந்தவன் கத்திப் பேசியது ,அங்கே நின்ற எல்லோருக்குமே கேட்டது .

"ஏய்...என்னப்பா ..வேகமா வந்து,"அவனைக்" கூட்டிட்டுப் போங்க...."னு பதற்றத்துடன் சொல்லி விட்டு,போனை அணைத்து விட்டான்.

"சரி சரி ! வா கெளம்புவோம்..! என்று நின்ற அனைவரும்,ஷேர் ஆட்டோவில் ஏறிக் கொண்டனர்.கொஞ்ச நேர பயணம்தான்,அவ்வூருக்கு வெளிப்புறத்தில் கடற்கரை செல்லும் வழியில் வளைந்து ஆட்டோ சென்றது.கொஞ்சத் தூரத்தில் "சார்ஜ் லைட்"வெளிச்சம் ஆட்டோவின் மேல் விழுந்தது. .அப்போது ஆட்டோவில் வந்தவர்கள்.வண்டியை செம்மண் சாலையில் நிறுத்தி விட்டு,இறங்கி நடந்தார்.லைட் வெளிச்சம் வந்த திசையை நோக்கி.அப்போது அமீர் சலீமிடம் கேட்டான்.

"அண்ணே..அவனுங்க எத்தனப் பேரு இருக்கானுகனு தெரியல..நாம அஞ்சாறுப் பேருதான் இருக்கோம்...என்ன செய்ய...!?"

அதற்கு சலீம் சொன்னான்....

"இல்ல !கொஞ்சப் பேருதான் இருப்பானுங்க...எல்லாப் பயலுவளும் தூங்கிருப்பானுவடா...."

இப்படியாக பேசிக்கொண்டே நடந்து,அவ்விடத்தை நெருங்கினார்கள்.பனைக் காட்டுக்குள்
தூரத்திலிருந்து பார்க்கையில் ,மூன்று அல்லது நான்கு பேர்கள் இருப்பதாகத்
தெரிந்தது.அருகில் வந்ததும் தான் சலீமிற்கு "பகீர்"என்று ஆனது.மீராசாவை பிடித்து வைத்திருப்பது ,ஐம்பது பேருக்கு மேலே இருந்தார்கள் .


             அங்கங்கே கொஞ்சம் ,கொஞ்சம் கூட்டமாக களைந்து நின்றுகொண்டிருந்தார்கள். சலீமையும்,அமீரையும் பார்த்ததும் ,அக்கூட்டத்தில் சிலர் கொஞ்சம் மரியாதையாகப் பேசினர்.

     "அண்ணே! மீராசா எப்ப பார்த்தாலும் ,எங்க பசங்கள கண்டபடிப் பேசுறான்.இவனை நாங்க அடிச்சா ,ஊர் சண்டைய இழுத்து விடுறானுங்க.."என ஆதங்கத்தோட சொன்னான் ஒருத்தன்.

    "சரி....!"இப்ப அவனை எங்கே....!?என சலீம் கேட்டான்.

"வாங்க"என முன்னாடிச் சென்றவனை பின் தொடர்ந்தார்கள்.கொஞ்சத் தூரத்தில் மீராசா நின்றான்.சுற்றி நான்கு பேர் நின்றார்கள்.நல்ல அடி விழுந்திருக்கும் போல, மீராசாவிற்கு.முகத்தில் இடம் விட்டு,இடம் "சதைப் போட்டு"இருந்தது.மீராசாவிடம் அமீர் கேட்டான்.

"என்னடா நடந்துச்சி....!?ஏன் பிரச்சனையாச்சி...!? டேய் வாயத் தொற ...!?என அமீர் கேட்டதுக்கெல்லாம் பதில் சொல்லாத மீராசாவை,சலீம் அடிக்க ஆரம்பித்தான் ,திட்டிக் கொண்டே.அப்போதும் மீராசா ஒன்றும் சொல்வதாக இல்லை.சலீம் அடித்ததைப் பார்த்து,பிடித்து வைத்திருந்தவர்கள்.கொஞ்சம் விரைப்பாக இருந்ததைக் குறைத்தார்கள்.சரி காலையில் பேசிக் கொள்வோம் என கிளம்புகையில்.பிடித்து வைத்தவர்களில் ஒருத்தன் சொன்னான்.

"இனிமே ,ஒழுங்கா அவனை இருக்கச் சொல்லுங்க..இல்லனா ,அடிபட்டுதான் சாவான்...."

"டேய் !"பொத்துங்கடா " என்ன ஒன் ஊரு னு சவுண்டு குடுக்குறீயோ..!?அவன் தப்பு பண்ணுனா ,எங்கள்ட சொல்லு,அத விட்டுட்டு ,என்ன .....க்கு அடிச்சீங்க..."சலீமுடன் வந்தவன் வார்த்தையை வீச,ஆரம்பித்தது வாக்கு வாதம்.அப்புறம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.மாறி மாறி அடி விழுந்தது. இரவு நேரம் என்பதால்,சண்டைச் சத்தம் ஊரை எழுப்பி,இந்த இடத்துக்கு வர வைத்து விட்டது.பெரியவர்கள் வந்து ,சண்டையை ஒடுக்கினார்கள்.

"எதுவா இருந்தாலும் காலையில பேசிக்குவோம்"னு சலீமுடன் மீராசாவை அனுப்பி வைத்தார்கள்.சலீமிற்கும்,கூட வந்தவர்களுக்கும் சட்டைக் கிழிந்து இருந்தது."சண்டையில கிழியாத சட்டை எங்கே இருக்கு"னு வடிவேலு வசனம் பேச தான் ,அந்த இடத்தில் யாரும் தயாராக இல்லை.

       மீராசாவுடன் ஆட்டோ கிளம்பியது . அப்போதுதான் மீராசா வாயைத் திறந்தான்.நடந்ததைச் சொன்னான்.

"மூனு மாசத்துக்கு முன்னால, நரிப்பையூர்ல ,வாலிபால் மேட்ச்ல நம்ம ஊர் டீம் தோத்ததுக்கு,"அவனுங்க"நக்கல் பண்ணுறானுங்கள்ள,அதுக்கு "வாங்கி கட்டினானு"ங்கள்ள,அத மனசுல வச்சிகிட்டு இருந்துருக்கானுங்க...அது தெரியாம நான் அவனுங்க "சரக்கடிக்க "கூப்பிட்டதும்,போயிட்டேம்பா...போன எடத்துல ,என்னய அடிச்சிட்டு,நான்
தப்பா பேசினேன்னு சொல்லிட்டானுங்க... "............." என சொல்லி முடிச்சான் மீராசா.

அதற்கு சலீம் கடுப்பாகி மீராசா முகத்தில் அறைந்து விட்டு கேட்டான்.

".........."அங்கேயே சொல்ல வேண்டியதுதானே ..!?இங்க வந்து சொல்லுறே..."

"எண்ணே !சும்மா ,சும்மா கை நீட்ற வேலை வச்சுக்காதே..அங்கே சொன்னால்,பிரச்சனை பெருசாகும் னு சொல்லல" என்றான் மீராசா.

அங்கே அடிபட்டதுக்கும்,மீராசா நடந்ததை சொன்னதுக்கும்,அடிபட்ட இடத்தில் மிளகாய்ப் பொடி தடவியது போல்,இருந்தது அத்தனைப்பேருக்கும்.

"விடியட்டும் அப்போ இருக்கு அவனுங்களுக்கு...." என ஆத்திரமானார்கள்.ஆட்டோ ஊருக்கு வந்து விட்டது. அவன் ,அவன் வீட்டிற்குப் போய்விட்டார்கள்.சலீம் மட்டும் ரோட்டில் இறங்கி ,தன் பல்சரை எடுத்துக் கொண்டு தன் வீட்டுக்குச் சென்றான்.

பொழுது விடிய போகிறது.....


           நேற்று இரவு நடந்த சம்பவம்.விடிவதற்குள் ஊரெல்லாம் பரவி விட்டது.காலை ஏழரை மணிப்போல மீராசாவை அடித்ததில் ஒருத்தன், ஆட்டோ சவாரி வர மீராசா கூட்டாளிகள் அவனை அடித்து விட்டார்கள்.சில பெரியவர்கள் சண்டையை ஒடுக்கி ,அப்பையனை அனுப்பி விட்டார்.இங்கிருந்து ,தன் தம்பியை பள்ளிக்கூடத்திற்கு விட போன ஒருவனை அவர்கள் அடித்துவிட்டார்கள்.இப்படி மாறி,மாறி அடி,அடி,அடி.

          ஊரில் உள்ள பெண்கள் ,"பேதியில போவானுவோ"இப்படி அடிச்சிக்கிட்டு சாவுரானுங்களே"னு திட்ட ஆரம்பித்து விட்டார்கள்.இரண்டு ஊரிலும் பெரியவர்கள்,அடக்கினார்கள் சண்டைப் போடுபவர்களை,கேட்பதாக இல்லை .அதோடு "அடிபட்டவர்கள்",காவல் நிலையத்தில்
மாறி,மாறி புகார் அளித்தார்கள் .இரண்டு ஊரிலும் உள்ள பெரியவர்களை ,காவல் நிலையத்திற்கு அழைத்து, ஒன்றாக உட்கார வைத்துப் பேசினார்.இன்ஸ்பெக்டர் முருகன்.

"இந்தா பாருங்க,ரெண்டு பக்கமும் ,பெட்டிசன் கொடுத்துருக்காங்க,நீங்க ரெண்டு ஊருமே,சம்பந்தம் கலக்கி இருக்கீங்க ,தாயா,புள்ளயா இருக்குறீங்க,அப்படி இருக்கையில "சல்லி பயலுவ"இவனுங்கள ,ஒடுக்கி வைங்க.ரெண்டு நாள் டைம் அதுக்குள்ள ,நீங்க சமாதானமா போயிட்டா நல்லது,அப்படி இல்லனா,நாங்க எஃப் ஐ ஆர் போட்டு ,"செய்ய" வேண்டியதை செஞ்சிக்கிறோம்"என மிரட்டலாக சொல்லி அனுப்பினார் இன்ஸ்பெக்டர் .

      இரு ஊர் பெரியவர்கள் சேர்ந்து சம்பந்தபட்டவர்களை மட்டும் ,அழைத்துப் பேசினார்கள் .அப்போதும் சண்டையிட்டவர்கள்,முறுக்கிக் கொண்டு இருந்தார்கள்.அப்போது பழுத்த வயதான சம்சு அப்பா எழுந்துப் பேசினார்.

     "டேய் மாப்ளைங்களா..!!ஏண்டா இப்படி அடம்புடிக்கிறீங்க.,ஒங்க அக்காமார்கள,தங்கச்சிமார்கள அங்கேயும்,இங்கேயும் கட்டிக் கொடுத்து இருக்கீங்க, உங்களுக்கு நேரம் போகலைனா,அடிச்சிக்கிறீங்க.அப்புறம் பந்து வெளயாட்டுல ஒண்ணா சேர்ந்துக்கிறீங்க,இப்படிதானே நீங்களுவ பண்ணுறது.!?சரி இளந்தாரி பயலுவ "அப்படி ,இப்படி"இருப்பானுவ னு பெரிய மனுசனுங்க நாங்களும் பொறுமையா போறோம்.இல்லயினா ரெண்டு ஊரு "படுவா பயலுவ"ளயும்,உரிச்சி தொங்கப் போட்ருவோம்.,என்ன சொல்லுறீக.!?அப்பா நான் நல்லதுதான் சொல்லுறேன்.இல்லயினா சொல்லுங்க,போலிஸ் கேஸ் னு நீங்கதான் அலையப்போறீங்க..."என பேசி முடித்தார்.

              அதன் பிறகு பெரும் அமைதி ஏற்பட்டது.யாரும் எதிர்த்துப் பேசுவதாக இல்லை.இதுதான் சந்தர்ப்பம் என்று ,பெரியவர்கள் முடிவை சொன்னார்கள்.அடிபட்டவர்களின் மருத்துவச் செலவிற்கு,அடித்தவர்கள் பணம் கொடுத்து விட வேண்டும்,காவல் நிலையத்தில் கொடுத்த மனுக்களை திரும்ப பெற வேண்டும்.அடிக்கடி சண்டைக்கு காரணமான இரண்டு ஊர் இளைஞர்களுக்கும் அபராதம் போட்டார்கள்.அப்புறம் சண்டைப் போட்டவர்களை கைக்குலுக்கி கொள்ளச் சொன்னார்கள்.சுமூகமாக முடிந்தது இரு ஊரு பிரச்சனையும்,ஆனாலும் காமம் தீர்ந்த பின்னும் மிச்சமிருக்கும் காதலைப் போல்.முடிந்து விட்ட சண்டையிலும் ,இன்னும் ஒரு சண்டை மிச்சம் இருந்தது.

ஆமாம்.அந்த சம்பவத்தின்போது ஊரில் இல்லாமல்,ஒரு வாரம் சுற்றுலா சென்றிருந்த அஜீஸ் கோபத்தில் வந்துக் கொண்டிருந்தான்.அவனுக்கு என்ன கோபம் என்றால்,அவன் சாச்சி(சின்னம்மா) மகன் மீராசாவை,சலீம் எப்படி அடிக்கலாம் என்கிற கோபம்.

அஜீஸ் கோபக்காரன் என கூட்டாளிக்குள் ஒரு பேச்சு இருந்தது .அப்படியென்றால் சலீம் மட்டும் சாந்த சொரூபியா..!?

     (தொடரும்....)

      

Sunday 27 September 2015

கவிதையே..!! (96-100)


96)
உன்னை 
தாய்ப்பாலாய்க் குடித்துதான்!

பசியமர்த்திக் கொள்கிறது
என் உணர்வுக் குழந்தை!
----------------------------
கவிதையே..!! (97)
-------------------
உன்னை 
வாசித்தலிலும்,நேசித்தலிலுமே
ஊதுபத்தியாய் கரைந்து மணம் வீசுகிறது !

என் ஓய்வு நேரங்கள்!
--------------------------
கவிதையே..!! (98)
---------------------
உன்னைத் தொடர்ந்து
எழுதும் நான்!

சில நாட்கள் 
உன்னை எழுதாமலும் இருக்கிறேன்!

ஏனென்றால் 
உன்னை எழுதிடச் சொல்லி 
நீ செய்யும் சித்திரவதைகளும்
எனக்குப் பிடித்திருப்பதால்!
---------------------------
கவிதையே..!! (99)
--------------------
என் புன்னகைக்குள் ஒளிந்திருக்கும் 
சோகத்தைப் புரிந்தவர்களால் மட்டுமே!

என் கவிதைக்குள்ளிருக்கும்
"கரு"வினை உணர முடியும்!
-------------------------------
கவிதையே..!! (100)
----------------------
என் கண்களைப் 
படிக்கத் தெரிந்த உன்னிடத்தில்!

என் காதலை மறைக்கத் தெரியாமல்
தோற்றுத் தான் போகிறேன் !
--------------------------------

Friday 25 September 2015

கவிதையே..!! (91-95)


உன்னால் ஏற்படும் 
சுகத்தையும்!

உன்னால் ஏற்படும்
ரணத்தையும்!

என்னால் மட்டுமே 
உணர முடியும்!

"கவிதையே"!
----------------------
கவிதையே..!! (92)
----------/---------
உனது நினைவெனும் சமுத்திரத்தில்
மிதந்திடும் காகித கப்பல் நான்!
----------------------------------
கவிதையே..!! (93)
------------------
நீ எனக்கு
குளிரும் கண்ணீர்த்துளி!

சுடும் பனித்துளி!
---------------------------
கவிதையே..!! (94
--------------------
என் கைப்பேசியும் 
கவிதைப் பேசுவது!

உன்னுடன் பேசுகையில்தான்
"கவிதையே"!
-------------------------------
கவிதையே..!! (95)
---------------------
புகைப்படத்தினில் 
நான் அழகாய்த் தெரிவதெல்லாம்!

உன் நினைவினில் திளைப்பதால்தான்!
----------------------------------------


Sunday 20 September 2015

முஹம்மது அஹமது ! (ஒரு பார்வை)


      இன்றைக்கு முஹம்மது அஹமது விவகாரம் ,உலகமெங்கும் பேசப்படுகிறது .அமெரிக்காவில் தான் செய்த கடிகாரத்தினை ,தனக்கு படித்துக் தரும் ஆசிரியரிடம் காண்பிப்பதற்காக கொண்டுச் சென்றவனை ,வெடிகுண்டு கொண்டு வந்திருப்பான் என்கிற அனுமானத்தில் அவனைப் போலிசிடம் ஒப்படைத்தனர்.பிறகுதான் தெரிந்தது.அது குண்டு அல்ல ,கடிகாரம் என்பது .பின்னர் அஹமது விடுவிக்கப்பட்டான்.இவ்விவகாரம் வெளியானப் பிறகு ,ஒபாமா வெள்ளை மாளிகைக்கு அழைக்கிறார் அஹமதுவை.இப்படியாக லட்சக்கணக்கில் அஹமதுவிற்கு ஆதரவு குவிகிறது.சரி !சந்தோசம் மகிழ்ச்சி.

        அதேவேளையில் நாம் ஒன்றினை நினைவு கொள்ள வேண்டும்.சந்தேகப்பட்ட அந்த ஆசிரியருக்கும்,அஹமதுவிற்கும் ,ஏதேனும் முன் பின் பகைகள் இருந்தனவா ??இல்லையே..! பிறகு ஏன் அவ்வாசிரியருக்கு அவ்வாறான எண்ணம் வர வேண்டும்,அவ்வெண்ணத்தை விதைத்தது எது.!? காட்சி ஊடகங்களும்,அச்சு ஊடகங்களும் திரும்ப,திரும்ப ஒரு சாராரை ,தவறாக சித்தரித்ததுதானே...?அந்தச் சிறுவன் மீதும் சந்தேகப் பார்வை விழச் செய்தது.எந்தவொரு இஸ்லாமிய அடையாளமான ,தாடியோ ,தொப்பியோ இல்லாத இந்தச் சிறுவனுக்கே இந்தக் கதியென்றால்,இஸ்லாமிய அடையாளங்களோடு வாழுபவர்கள்,எதிர்கொள்ளும் சங்கடங்கள் ,சந்தேகப்பார்வைகள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை,பொய்ப்பிரச்சாரம் செய்யும் ஊடகங்களும்,பரபரப்புச் செய்தி என வெளியிட்டு வயிறு வளர்ப்பவர்களும் சிந்தித்திட வேண்டும்.திருந்திட வேண்டும்.

       அப்படியென்றால் இஸ்லாமியர்களில் கெட்டவர்கள் இல்லையா!? என கேள்விகள் எழலாம்.கெட்டவர்கள் இருக்கலாம், அதேவேளையில் அந்த "கெட்டவை"களை இஸ்லாம் அனுமதிக்கவில்லை என்பதே உண்மை."அநியாயமாக ஒரு உயிரைக் கொல்ல" குர்ஆனும் அனுமதிக்கவில்லை,நபிகளார் வாழ்விலும் அது நடக்கவில்லை .அப்படி இருக்கையில் ,அநியாயமாக நடப்பவர்கள்,இஸ்லாத்தைப் புரிந்துக் கொண்டவர்கள்தானா !?இல்லை ,யாருக்கேனும் அவர்கள் கைக்கூலிகளா!? எனவும்,தனிப்பட்ட  சிலர் செய்து தவற்றிற்கு ஒரு மார்க்கத்தின் மீது பழி சுமத்துவது நியாயமா !? என செய்தி வெளியிடுபவர்கள் சிந்தித்து செய்திகளை வெளியிடுங்கள்.அப்பாவிகளை குற்றவாளிகளாக்க உங்களது பேனா மையை பயன்படுத்தாதீர்கள் .செய்திகளை வெளியிடுவதற்கு முன் உங்களுக்கு மனசாட்சி என்ற ஒன்று இருக்குமேயானால் ,அதனையும் கொஞ்சம் தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள் .

     

Thursday 17 September 2015

கவிதையே..!!(86-90)

நீ திரும்பிப் பார்க்காத
என் முகத்தை!

இனி
புகைப்படத்திற்குக் கூட 
திரும்பிக் காட்டுவதாக இல்லை!
----------------------------------
கவிதையே..!!(87)
-------------------
உன்னைக் கரம் பிடித்தது
என் வாழ்வினை அர்த்தமாக்கிடத்தான்!

ஆனால் நீயோ
அற்புதமாக்கி விட்டாய்!
----------------------------
கவிதையே..!!(88)
------------------
உன்னை நேசிக்க 
ஆரம்பித்தப் பிறகு தான்!

என்னையும் கொஞ்சம்
நேசிக்க ஆரம்பித்தேன்!

"கவிதையே"!
---------------------------
கவிதையே..!! (89)
------------------
உன்னை எழுதிவிட்டு 
அழிக்கிறேன்!

பிறகு
அழித்ததையேத் திரும்ப
எழுதுகிறேன் !

ஆச்சரியக்குறி
கேள்விக்குறியிட்டு 
உன்னை அழகும்படுத்துகிறேன்!

சிறிது நேரத்தில் 
அக்குறிகளை அழித்து தொடர்ப்புள்ளி இடுகிறேன்!

இப்படியாக 
உன்னைக் கொடுமைப்படுத்திடும்
என்னைப் பார்த்து!

எப்படிதான் சிரிக்கிறாயோ !?
ஓர் குழந்தையைப்போல !
----------------------------
கவிதையே..!! (90)
-------------------
நீ எனக்கு
விட்ட கதையா !?
தொட்ட கதையா !? தெரியவில்லை !

ஆனாலும் 
என் வாழ்வின் 
விடுகதை நீ !
------------------------

Wednesday 16 September 2015

ஆயிஷா..! (சிறுகதை)


       ஹஜ்ஜுப் பெருநாள் நெருங்கி விட்டதால்,இராமநாதபுரம் "மதார்ஷா" ஜவுளிக்கடையில் கூட்டம் அதிகமாகவே இருந்தது.அந்த கூட்டத்தைப் பிளந்துக் கொண்டு ஆசிப் வெளியேறினான் .தன் மனைவி ஆயிசாவுடன்.ஆசிப்பிற்கு முப்பத்தி மூன்று வயதுதான் .கொஞ்சம் உடம்பு பருத்து வயதைக் கூட்டிக் காட்டும்,பார்க்க அழகாகதான் இருப்பான்.கொஞ்சம் தொந்தியைக் குறைக்க நினைச்சி,நினைச்சே "டையர்ட்"ஆகிப் போனவன்.அவன் மனைவி நல்ல களையாக இருப்பாள்.அவனுக்கு ஏற்ற ஜோடிதான்.இருவரும் வாங்கிய சாமான்களை கம்பு பைக்குள் வைத்துக் கொண்டு,தான் வந்த "விக்டா"வை நோக்கிச் சென்றார்கள் .

          அங்கே "விக்டா"பக்கத்திலிருந்த,ஒரு கல் மேலே உட்கார்ந்துக் கொண்டு டிரைவர் காதர்.கோல்ட் ப்ளாக் இழுத்துக்கொண்டு இருந்தான்."புண் பட்ட நெஞ்சைப் புகையை விட்டு ஆத்துடா"னு கூட இருந்த கூட்டாளி சொல்லி,"இழுக்க"ஆரம்பிச்சவன்,இப்போது "இழுத்து,இழுத்து" நெஞ்செல்லாம் புண்ணாக எரியுதென்று  மருந்து வாங்கி சாப்பிடுகிறான்.ஆனால் சிகரெட்டை விட முடியலை னு சொல்லிக்கொண்டே சிகரெட் பிடிப்பான்.தூரத்தில் ஆசிப் வருவதைப் பார்த்ததும் ,மிச்சமிருந்த சிகரெட்டை,இரண்டு "இழுப்பில்"காலி செய்து விட்டு,காலால் சிகரெட்டை அணைத்து விட்டு ,ஆசிப்பை நோக்கிச் சென்றான்.

        வண்டியின், பின்னால்,வாங்கியதை திணித்து விட்டு, மூவரும் ஏறி அமர "விக்டா"கிளம்பியது. காதர் பேச்சுக் கொடுத்தான் .தன் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த ஆசிப்பைப் பார்த்து..

   "என்ன மச்சான்.!?இவ்வளவு சீக்கிரமா "ஷாப்பிங்"க முடிச்சிட்டீங்க....!!

   "ஏன்டா..!?"சீரியசா"க் கேட்கிறியா .!?இல்ல ,நக்கலா கேட்கிறியா..!?நைட் ஒம்பதரைக்கு மேலே ஆயிருச்சி ..!?ஒனக்கு இது சீக்கிரமா ..!? ஒன் அக்காகூட வந்தா,லேட் ஆகாம என்ன செய்யும்..!?

       "ஹா..ஹா...!இல்ல மச்சான் !சும்மா தான் கேட்டேன்..."என சிரித்தான்.

 நடு பக்கத்து இருக்கையில் ஆயிஷா,சிரித்துக்கொண்டே காதரிடம் கேட்டாள்.  

      "ஏன்டா காதரு .!ஒனக்கு எப்ப கல்யாணம்..!? மாமா மாவள பேசி இருக்குனு கேள்விப்பட்டேனே..!?

    "பார்ப்போம்கா..!! மாமாக்காரரு பொண்ணுத் தர யோசிக்கிறாரு...!காசுக்காரனா நான் இருந்தால்,தருவாக !?என அலுத்துக் கொண்டான்.

      ஆசிப் காதரைப் பார்த்துக் கேட்டான். "நீ ஒழுங்கா இருந்தா பொண்ணுத் தருவாங்க ..!!நீ பொறுப்பில்லாம இருந்தா .,யாரும் யோசிக்க தானே செய்வாங்க..!இதுல ஒம் மாமாவ குத்தம் சொல்லுறே...

காதர் பதில் சொல்லாமல் ,வண்டி ஓட்டிக் கொண்டிருந்தான்.அவன் மௌனத்தை புரிந்துக் கொண்ட ஆசிப் தொடர்ந்தான்.

       "என்ன சத்தத்தைக் காணோம்..!?நீ மட்டும் என்ன யோக்கியனா !?னு என்னை நெனக்கிறியோ...!?

லேசான சிரிப்புடன் காதர் சொன்னான்..

     "இல்லங்க..!அப்படி நெனைக்கல...!!

   "அதான் ஒன் சிரிப்பே சொல்லிருச்சே...ஆமானு...நான் ஒரு நேரத்துல "ஆடினேன்".இப்ப எல்லாத்தையும் விட்டுட்டு உக்காந்துட்டேன்,அல்லாவோட கிருபையால ,நானும் ஒரு மனுசனா ,பொண்டாட்டி புள்ளயோட சந்தோசமாக இருக்கேன்....!திருந்த பாரு மாப்ள..!!னு ஆசிப் ஆதங்கத்தோட சொல்லி முடித்தான்.

வண்டி இராமநாதபுரத்தைத் தாண்டி, கீழக்கரை வழி ,இ சி ஆர் சாலையில் சென்றுக் கொண்டிருந்தது .காதர் ,ஆசிப்பிற்கோ,ஆயிஷாவிற்கோ நெருங்கிய சொந்தமெல்லாம் கிடையாது.ஒரே ஊர்க்காரன்,அந்த வகையில் ,சிறுவயதிலிருந்தே ஆசிப்பை மச்சான் என்றே கூப்பிடுவான்.அந்த உறவு இதுவரைக்கும் நீடிக்கிறது .ஆசிப் வண்டி வாங்கியதும்,இவனுக்கு "டிரைவிங்"தெரியும் என்பதால் வேலைக்குச் சேர்த்துக்கொண்டான்.

சாலையில் மிதமான வேகத்தில் சென்றுக் கொண்டிருந்தது வாகனம்.கொஞ்ச நாட்களுக்கு முன்னால் பெய்த மழையால்,சாலையோரங்களிலும், கண்மாய்களிலும் தேங்கிருந்த தண்ணீரால் ,காற்றும் குளிர்மையைத் தாங்கி வந்து தழுவிச் சென்றது."பாட்டைப் போடு மாப்ள "னு ஆசிப் சொன்னதும்,காதர் சுவிட்ச் ஐ தட்டி விட்டான்."உன் விரல்கள் வெள்ளரிப் பிஞ்சிகளோ.!?இல்லை,வெடித்தப் பருத்தி பஞ்சுகளோ..!?என "ஈரத் தாமரைப்பூவே.."பாடல் விட்டதிலிருந்து பாடியது.சிறிது நேரம்தான் கடந்திருக்கும்.ஆயிஷா கைப்பேசி அழைத்தது.பதட்டத்துடன் கைப்பேசியை எடுத்தாள்...!!


     கைப்பேசியில் அழைத்தது ஆயிஷாவுடைய மாமியார் தான்.அழைப்பை ஏற்பதற்கு முன் தன் கணவனை நோக்கிச் சொன்னாள்.

     "ஏங்க !மாமிதாங்க போன் பண்ணுறாக...!!

ஆசிப் மனதுக்குள் சிரித்துக் கொண்டே சொன்னான்.

   "எடுத்துப் பேசு! ஏன் லேட்டாச்சினு திட்டுவாக, வாங்கிக்க..."னு சொன்னான்.

ஆசிப்பைச் செல்லமாக முறைத்துக் கொண்டே,அழைப்பை ஏற்றாள்.காதர் பாட்டுச் சத்தத்தைக் குறைந்தான்.

"ஹலோ..."!

"............."!

"இல்ல மாமி,இந்தா வந்துட்டோம்..அரை மணி நேரத்துல வூட்டுக்கு ,வந்துருவோம்.."

"..................."!

"இல்ல,உங்க மகன்தான் லேட் பண்ணிட்டாக..!கூட்டாளிமார்களுக்கு,சட்டை வாங்கனும்னு..."

இதைக்கேட்டதும் பிடரியில் யாரோ,அடிச்சதுப்போல் மனைவியைத் திரும்பிப்பார்த்தான் ஆசிப்.அவள் முகத்தைச் சுருக்கி ,உதட்டைச் சுழித்து கெஞ்சலாகப் பார்த்தாள்.ஆசிப் சிங்கம் அதில் சிதைந்துப் போச்சி,"பாதகத்தி"இப்படிதானே செஞ்சிறா",னு நினைத்துக் கொண்டிருக்கையிலேயே,ஆயிசா "இந்தா,"அவுகள்ட" கொடுக்குறேன் ,பேசுங்க "னு கைப்பேசியை ஆசிப்பிடம் நீட்டினாள்.வேறு வழியில்லாமல் போனை வாங்கிப் பேசினான்.

"ஹலோ ..."

"............,..........,............,"

"எம்மா !நீம்பாட்ல திட்டாத.,கொஞ்ச நேரத்துல வந்துருவேன்..!மகன்காரன் மூத்தவன் என்ன செய்யிறான்..!?

"...........,"

"சரி! தூங்கட்டும், நீ சாப்பிட்டு,மாத்திரய போட்டுட்டுத் தூங்கு,நானும்,ஆயிசாவும் வீட்டுக்கு வந்து,சாப்பிட்டுட்டு சோத்துக்கு தண்ணி ஊத்திறோம்...!

"..............."

"ம்ம்...சரிம்மா வைய்யி"

பேசி முடித்து விட்டு,தன் மனைவியிடம் கைப்பேசியை நீட்டிக் கொண்டே,

"ஏம்ப்லா .!?உங்க மாமியா,மருமக சண்டயில என்னய மாட்டி விட்டே..."எனக் கேட்டான்.

"ஏங்க? மாமி ரொம்பத் திட்டுனாங்களோ...!? என தெரியாத மாதிரிக் கேட்டாள் .

"விக்டா"கீழக்கரை,மாயாகுளத்தை தாண்டி ,ஏர்வாடிக்கு செல்லுவதற்கு ,முன்னால் வரும் பெரிய வளைவு ஒன்றை ,மெதுவான வேகத்தில் வளைந்து வாகனம் செல்லுகையில் ,ஆசிப் ,காதரிடம் வண்டியை நிறுத்தச் சொன்னான்.

   "ரோட்டோரம், யாரோ கெடக்குறாங்கப் பாரு"னு ஆசிப்பும்,காதரும் இறங்கி ,அந்த இடத்தை நோக்கி நடந்தார்கள்.நிலவு வெளிச்சத்தில் ,மயங்கி கிடந்தவனை புரட்டிப் பார்த்தார்கள்.அவன் மைதீன் தான்,ஆசிப்பின் பக்கத்து தெருவைச் சேர்ந்தவன் .மைதீனைப் பார்த்ததும்,இருவரும்,ஒருவரை ஒருவர் தயக்கத்துடன் பார்த்தனர் .காதர் ஆசிப்பிடம் கேட்டான் .

"என்ன மச்சான் செய்ய...!?

"மப்புல" மயங்கி கெடக்குறான்டா..இப்படியே விட்டுட்டுப் போனா "ஒன்னுக்கெடக்க ஒன்னு"ஆகிப் போகும்டா.. வண்டியில கொண்டுப் போயி அவன் வீட்ல எறக்கி விட்ருவோம்"

இருவரும் கைத்தாங்கலாகத் தூக்கி வந்து முன் இருக்கையில் மைதீனைத் திணித்தார்கள் .என்ன நடக்கிறது என்பதை கூட அறிய முடியாத நிலையில்தான் அவன் இருந்தான்.ஆசிப் ஆயிசாவுடன் அமர்ந்துக் கொண்டான்.வண்டி கிளம்பியது .

சரி....
யார் இந்த மைதீன்....!!?????


மைதீனைப் பற்றி ஒற்றை வரியில் சொல்ல வேண்டுமானால்,"எல்லா சேட்டைகளையும் குத்தகைக்கு எடுத்தவன்".திருந்த மாட்டேங்குறானே னு வருந்தியப் பெற்றோர்கள்,கல்யாணம் முடித்து வைத்தால்,திருந்துவான் என ,நன்றாக "ஓதி" படித்த ஏழைப் பெண்ணைக் கட்டி வைத்தார்கள்.அவனோ ,செய்த பாவம் போதாது என கட்டியவளையும் ,சித்திரவதைச் செய்தான்.ஊரும் சொல்லிப் பார்த்தது,உறவும் சொல்லிப் பார்த்தது,அவன் மண்டையில்தான் ஏறாமல் போனது.

         மூன்றாண்டு காலம் இப்படியே கழிந்தது.மைதின் குணமோ மாறவில்லை.அவனைக் கட்டயவள் ,இஸ்லாம் காட்டிய வழியில் ,கணவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்துதான் வந்தாள்.ஆனால் கணவன் இவன், மனைவிக்கு செய்ய வேண்டிய கடமைகளில் தவறியப் போது,கலங்கித்தான் போனாள்.அவள் மார்க்கம் பெண்களுக்கு வழங்கிய,உரிமைகளையும் தெரிந்தவள்.அவ்வுரிமைகளில் ஒன்று,பெண்கள் ,கணவனை விவகாரத்துச் செய்திடும் உரிமை. இவள் எடுத்த முடிவிற்கு,யாரும் இவளை சமாதானப்படுத்த முயலவில்லை.இவள்பட்ட கஷ்டத்தை மற்றவர்கள் அறிந்திருந்ததால்.விவாகாரத்து ஆகி அவள் பிரிந்துச் சென்று விட்டாள்.மைதீனோ,எப்போதும்போலவே.அதே நேரத்தில்....

        " விக்டா" ஏர்வாடியை வந்தடைந்தது,வலதுப்புறமாக வளைந்துச் சென்றது. பந்து விளையாட்டுத் திடலை ஒட்டிய வீடுதான். மைதீன் வீடு.அவன் வீட்டிற்கு முன்னால்,வண்டி நிற்பதைப் பார்த்து ,அவனது அம்மா வெளியே எட்டிப் பார்த்தாள் .ஆசிப்பும்,காதரும் மைதீனை ,இறக்கியதைப் பார்த்ததும்,பதட்டத்துடன் ஓடி வந்து மைதீனைத் தாங்கி வீட்டுக்குள் அழைத்துச் சென்றாள்.ஆசிப்பின் முகத்தை ஏறெடுத்துக் கூட பார்க்கவில்லை அந்த தாய்.இதை ஆசிப் எதிர்ப்பார்த்ததுதான்.

          வண்டியில் ஏறிக்கொண்டார்கள்.வண்டி ஆசிப் வீட்டை நோக்கி பயணித்தது.இரண்டுத் தெரு தாண்டிப் போனால்,அவன் வீடு வந்து விடும்,சமீபத்தில் போட்ட சிமெண்ட் சாலையில் ,மெதுவாக ஊர்ந்துச் சென்றது.மைதீன் இவ்வாகனத்தில் ஏறிடும் வரை ஒரு அமைதி நிலவி இருந்தது.இப்போது வெறுமைக் குடிக் கொண்டிருந்தது .

          மைதீன் வாழ்க்கையில் கிடைத்த ஏராளமான அருட்கொடைகளை அறியாதவனாகத் தொலைத்தவன்.அதிலொன்று அவன் கட்டியிருந்த மனைவியும் ஒன்று.அவன் தொலைத்த அந்த வைரம் ,இன்னொருவன் வாழ்க்கை மகுடத்தில் சேர்ந்து அழகு சேர்த்திருந்தது.மைதீன் தொலைத்த வைரத்தை ஏற்றுக் கொண்டவன்தான் ஆசிப்.அவன் தொலைத்த வைரம் தான் விக்டாவில் வந்த ஆயிஷா..!!

(முற்றும்)

  

Saturday 12 September 2015

கவிதையே உனக்குள்தான் நான் வாழ்கிறேன்!

அதிகாலை இளங்காற்று முகம் தழுவிச்
செல்லுதலைப் போல்!

குளிக்கத் துவங்குகையில்
உச்சந்தலையில் முதல் துளி விழுதலைப் போல்!

காதல் பேச ஆயிரம் வார்த்தைகளிருந்தும் பேசிட முடியாமல் 
பிரியமானவளின் கைதனை இறுகப் பிடிப்பதைப் போல்!

பச்சிளம் குழந்தை முகத்தில் மீசை குத்திடாமல் முத்தம் பதிப்பதுப் போல்!

சீலாக் கருவாட்டு ஆனத்தில் மொச்சைப் பயறின் ருசியைப் போல்!

தொட்டில் குழந்தை தூக்கத்தில் சிரிப்பதனைப் பார்த்ததுப் போல்!

துள்ளிச் செல்லும் நதி நீரில் 
உள்ளங்கால்களை நனைப்பதுப் போல்!

எத்தனை எத்தனையோ
சுகம்தனை அனுபவிக்கிறேன்!

கவிதைகளை 
வாசிக்கையில்
எழுதுகையில்!

கவிதைகள் வரிகளினூடாக
வாழ்ந்துக்கொண்டும்
லயித்துக்கொண்டும்
சிரித்துக்கொண்டும் பயணிக்கிறேன்!

"ஒரு மாதிரியாக" என்னைப் பார்க்கும்
இவ்வுலகத்தினை கண்டு கொள்ளாமல் !

      

Thursday 10 September 2015

கருத்து வேறுபாடு...!!


   இன்றைய சூழலில் ,இயக்கங்களாயினும்,கட்சிகளாயினும்,ஏன் குடும்பங்களாயினும்,கருத்து வேறுபாடுகளென்பது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.கருத்து வேறுபாடுகளென்பது வரமா !?சாபமா!? என்பதைச் சிந்திப்பதை விட்டுட்டு ,எதார்தமானது என்பதனை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.

      ஏனென்றால் ஒரே தாய் ,தந்தைக்குப் பிறந்து வளர்ந்தாலும் வெவ்வேறு சிந்தனைக் கொண்டவர்களாகவே நாம் உள்ளோம்.அப்படி இருக்கையில் வெவ்வேறு குடும்பங்களாக ,வெவ்வேறு சமூகச் சூழலாக வாழ்ந்த,வாழுபவர்களிடம் கருத்து வேறுபாடுகள் எப்படி இல்லாமல் போகும்.ஒவ்வொருவரின் கைரேகைப் போலவே,ஒவ்வொருவரின் எண்ணங்களும் வெவ்வேறானவைகள்.கீ.வீரமணி அவர்கள் எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார் .இவ்வாறாக "கருத்து வேறுபாடு என்பது வேறு.கருத்து முரண்பாடு "என்பது வேறென்று.ஆம் ,வேறுபாட்டையும் ,முரண்பாட்டையும் நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.ஒரு ஊருக்கு நாம் செல்ல வேண்டும்,அதற்கு நாம் பேருந்தில் போக முடிவெடுக்கிறோமென்றால்,கூட வருபவர் ரயிலில் போவோமென்றால் ,இதுதான் கருத்து வேறுபாடு இருவரும்,அவ்வூருக்குப் போக வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருவருக்கும் இல்லை,ஆனால் எதில் போகனும் என்பதில் தான் கருத்து வேறுபாடு.அவ்வூருக்கு போகவே கூடாதென்றால் அதுதான் கருத்து முரண்பாடு.

       சரி !கருத்து வேறுபாட்டினை எப்படிக் களையலாம்!?தான் கொண்ட கருத்து தான் சிறந்தது என்று எண்ணும் எண்ணத்தினை மாற்றிட வேண்டும்.எதிரணியின் கருத்தினையும் மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.அக்கருத்தினில் உண்மை இருக்குமானால் ,மனமுவந்து ஏற்றுக் கொள்ளும் பெருந்தன்மையும் நம்மிடையே வேண்டும்.ஏனென்றால் சிறுவயதில் நிலா நம்முடன் வருவதாக எண்ணி குதூகலித்த காலமும் உண்டு.பின்னாளில்தான் நாம் உணர்ந்தோம்,நிலாவைப் பார்த்துக் கொண்டேதான் நாம் நடந்தோம் என்பதை.சில காலம் கழித்து நாம் உணரலாம்,மாற்றுக் கருத்துடையவரின் கருத்து சரிதான் என்று.இலையில் தேங்கி இருக்கும் ஓர் துளியினை ஒருவர் 
மழைத்துளி எனலாம் ,மற்றவர் பனித்துளி எனலாம்.மழையா !?பனியா !?என இருவரும் சண்டையிடாமல்,"துளி" என்று இருவரும் கொண்ட ஒத்தக் கருத்தில் ஒன்றிணையலாமே.....!!!

      

Tuesday 8 September 2015

என் ஆசைகள் ..!!


மயிலிறகாகி கவிதைப் புத்தகத்தினுள்  ஒளிந்திட !

தாய்ப்பாலாகி குழந்தை முகத்தில்  வாசமாகிட!

ரத்தத்துளியாகி தாய் நாட்டிற்காகப் போராடும் போராளியின் உடலில் ஓடிட!

மழைத்துளியாகி மல்லிகை மொட்டினுள் தங்கிட!

தாவணிமுனையாகி பிரியமானவளின் முக்காடாக மாறிட !

பேனாவின் மைத்துளியாகி,புரட்சியாளனின் எழுத்தினில் ஓர் புள்ளியாகிட!

வாழ்வை அர்த்தமாக்கி,மரணத்திடும்போதும் புன்னகைத்திட !