Thursday 31 July 2014

உப்பு..!! (நகைச்சுவை )


     (விளம்பரத்தார்)- "உங்க பேஸ்ட்ல உப்பு இருக்கா..!?

     (பொதுமக்களில் ஒருவர் )- "பல் செட் வாங்கவே காசில்லாம இருக்கேன்..!இதுல பேஸ்ட் எங்கேயா வாங்க..!?

     

கும்பகோணத்தீ விபத்து !

குழந்தைகளை எரித்த
தீயே!

நீ!
நீதியையுமா..!?
எரித்துவிட்டாய்!

      

Wednesday 30 July 2014

இனி...!!

இதுவரைக்கும்
என் ஓட்டத்திற்கு
ஓர் அர்த்தம் இருந்தது !

இனி
அர்த்தமாக்கவே
என் ஓட்டம்  இருக்கும்!

   

Tuesday 29 July 2014

பெருநாள்..!!

இவ்வருட
நோன்பு பெருநாளில்!

அருகிலிருக்கும்
சொந்தங்களுக்காக
உதடுகள் சிரிக்கிறது !

ஆனால்
காஸாவின் கதறலாலோ
கழுத்து நெரிக்கப்படுகிறது!

          

Monday 28 July 2014

குர்ஆன்பற்றிய கவிதைகள்..!! (12)

குர்ஆனை
ஏற்றவர்களுக்கும்!

ஏற்கப்போகிறவர்களுக்கும்!

நன்றாகத் தெரியும்!

சோதனைகள்
தம்மை
சுழற்றியடிக்கும் என!
------------------------
முதியோர் இல்லங்கள்
இல்லாமலாகி விடும்!

இல்லங்கள்
முதியோர்களால்
அலங்கரிக்கப்படும்!

இறைமறையை
புரிந்துக்கொண்டால்!
------------------------
எத்தனை சட்டங்கள்
போட்டாலும் !
பெண்சிசுக்கொலையை
தடுக்க முடியாது!

குர்ஆனைப்படித்துப்
பாருங்கள் !
அநியாயமாக எவ்வுயிரையும்
கொல்ல மனம் வராது!
-------------------------------
     

Sunday 27 July 2014

கைப்பேசி ..!!

வாழ்வில் கைப்பேசியை
தொலைக்கிறார்களோ.!?
இல்லையோ.!?

கைப்பேசியினுள்
வாழ்க்கையை தொலைக்கிறார்கள்!

     

Friday 25 July 2014

கேள்விக்குறிகள்...!!?

கடற்கரை காற்று!
கடலலை சப்தம்!

கொடுக்காப்புலி மரங்கள்!
கல்லடிப்பட்ட புளியங்காய்கள்!


செம்பருத்தி பூக்கள் !
ஆலமர சருகுகள்!

களமாடிய மைதானம்!
பிளந்திருக்கும் நிலம்!

"வாப்பா"வின் கோபம்!
"உம்மா"வின் பாசம் !

இலக்கணப்பிழையான
மழலை பேச்சுக்கள் !

வரம்புமீறிய நண்பனின்
விமர்சனங்கள்!

எத்தனையைத்தான்
இழப்பது
இப்படியாக !

பணத்தை மட்டுமே
தேடுவதாலே!

ஒன்றை இழந்தால்தான்
இன்னொன்றை பெறலாம் என்பது
சரிதான்!

அவ்வொன்றுக்காக (பணம்)
இழப்புகளை கணக்கிட்டால் அடுக்கலாம்
கேள்விக்குறிகளைத்தான்..!!

     

Thursday 24 July 2014

கணக்கு வழக்கு..!!

பெத்ததையெல்லாம்
பெத்தவங்க வளர்க்குறாங்க.!

பெத்தவங்களை
பெத்ததுங்க பார்க்கனும்னா.!

கணக்கு வழக்கு
பார்க்குறாங்க..!!

        

Wednesday 23 July 2014

தெரியாது..!!

சுடும் நெருப்புக்கு
தெரியாது!

தாம் சுடுவதால்
தங்கம் ஜொலிக்கிறதென்பது!

      

Tuesday 22 July 2014

கனவு..!!

என் கண்களை
விமர்சிப்பவர்களுக்கு
தெரியாது!

அது
சுமந்திருக்கும்
கனவுதனை.!

         


Monday 21 July 2014

பாலஸ்தீனம்..!!

வரலாறு தெரிந்தவர்களுக்கு
நன்றாகத் தெரியும்!

பாலஸ்தீனமென்பது!

வீரத்தின் விளைநிலமென்பது.!!

   

Sunday 20 July 2014

குர்ஆன்பற்றிய கவிதைகள்..!!(11)

கல்மனதையும்
கரையச்செய்யும்!

பதறும்மனதையும்
பலமடையச்செய்யும்!

குர்ஆன் வசனங்கள்!
--------------------------
எதை எதையோ எழுவதற்கு
நான் சலித்தவனில்லை!

ஆனால் குர்ஆனைப்பற்றி
எழுத முனைகையில் திணறித்தான்
போகிறேன் !

நீச்சல் தெரியாதவன்
ஆழ்கடலில் சிக்குண்டதுப்போல்!
---------------------------------
மரணத்தண்டனையே தீர்வு
கற்பழிப்பிற்கு என
ஓங்கி முழங்குகிறார்கள்!

குர்ஆன் அன்றே சொல்லியதை
நினைவூட்டினால்
ஏனோ..!?
முனுமுனுக்குகிறார்கள்!
-------------------------
போராட்டங்கள்
வெடிக்கவில்லை!

கோஷங்கள்
முழங்கவில்லை!

ஆனாலும்
பெண்களின் பாதுகாப்பு
உறுதிசெய்யப்பட்டது !

இறைவசனங்களால்!
------------------------

Saturday 19 July 2014

அடையாளம்..!!

கட்டவிழ்த்து விடப்பட்ட
அநியாயங்கள்தான்!

அடையாளம் காட்டுகிறது!

மனித நேயம் கொண்டவர்களை!

     

தூக்கு..!!

நீதியும்
தூக்கில் தொங்குகிறது!

கொல்லுபவனையும்
கொல்லப்படுகிறவனையும்
பார்த்தே!

தீர்ப்புகள்  வேறுபடுவதால்!

     

Friday 18 July 2014

சிகப்பு ரோஜாக்கள்..!!

ரத்தச் சிகப்பு ரோஜாக்களில்
மனம் திளைத்தது உண்டு!

காஸாவில்
ரத்தத்தில் சிவந்த ரோஜாக்களால்
நெஞ்சி அறுபடுகிறது இன்று!

       

Thursday 17 July 2014

குர்ஆன்பற்றிய கவிதைகள்..!!(10)

நீங்கள்!
குர்ஆனைப் படிக்க
முஸ்லிமாக இருக்க வேண்டிய
அவசியமில்லை !

குர்ஆனை படித்ததும்
முஸ்லிமாகிடனும் என்கிற
கட்டாயமும் இல்லை !

விருப்பப்பட்டால்
ஏற்றுக்கொள்ளலாம்!

விரும்பாவிட்டால்
தவிர்த்துக்கொள்ளலாம்!

இது எனது
கருத்தல்ல!

குர்ஆனின் கருத்தும்
இதுதான் என்பதும்
பொய்யில்லை !
-----------------------
குர்ஆனை ஏற்றவர்கள்
வாட்களுக்கு பயந்து
ஏற்கவில்லை !

வாழ்வியல் மாற்றத்திற்காகவே
ஏற்றார்கள்!

ஏற்கிறார்கள்!
----------------------
மனிதர்களிடையே
நிற,உருவ வேறுபாடுகள் !

அடையாளம் கண்டுகொள்ள
இறைவனின் ஏற்பாடுகள்!

அதனைக்கொண்டு
அடித்துக்கொள்கிறது
"அரைவேக்காடுகள்''!
--------------------------
"எந்தவொரு ஆத்மாவிற்கும்,
அது தாங்கிக்கொள்ள முடியாத,
சோதனையை இறைவன் கொடுப்பதில்லை!"-என
இறைமறை சொல்லுதுங்க!

இதனை நம்பிய மனதில்
விரக்தி வருமாங்க..!?
--------------------------

பேனா மை..!!

தனி'மை'யை
மையாக நிரப்பிக்கொள்கிறது!

கவிதைப் பேனாக்கள்!

     

Monday 14 July 2014

குர்ஆன்பற்றிய கவிதைகள்..!! (9)

குர்ஆன் கூறும்
பொருளாதாரச் சட்டம்!

பணக்காரர்களை
கட்டுப்படுத்தும் !

ஏழைகளை
கண்ணியப்படுத்தும்!
------------------------
நீங்கள்!
அறிஞராகவோ,
கவிஞராகவோ,
சிந்தனையாளராகவோ,
இருக்கலாம் !

உங்கள் சிந்தனைக்குள்
வந்திடாத சிந்தனைகளை
படித்திடனுமா..!?

வாருங்கள்
இறைமறையில்
படிக்கலாம்!
------------------------------
இறைவனின் வார்த்தைக்கும்
மனிதனின் வார்த்தைக்கும்
வித்தியாசம் அறிய ஒரே வழி!

குர்ஆனைப் படிப்பதுதான்!
-------------------------------
நீங்கள்!
குர்ஆனைப் படிக்க
முஸ்லிமாக இருக்க வேண்டிய
அவசியமில்லை !

குர்ஆனை படித்ததும்
முஸ்லிமாகிடனும் என்கிற
கட்டாயமும் இல்லை !

விருப்பப்பட்டால்
ஏற்றுக்கொள்ளலாம்!

விரும்பாவிட்டால்
தவிர்த்துக்கொள்ளலாம்!

இது எனது
கருத்தல்ல!

குர்ஆனின் கருத்தும்
இதுதான் என்பதும்
பொய்யில்லை !
------------------------
     


குர்ஆன்பற்றிய கவிதைகள்..!!(8)

இறைமறையை
புரிந்தால் !

வறுமைக்கு பயந்து
கருவை கலைக்க மாட்டார்கள் !

வரதட்சணை பயத்தால்
கள்ளிப்பால் ஊற்றமாட்டார்கள்!
---------------------------------
மத வெறி!
இன வெறி!

மொழி வெறி!
தேச வெறி!

இப்படியான
வெறிகளையெல்லாம்!

அறுத்து எறிந்திடும்
குர்ஆன் வரிகள்!
--------------------------
குர்ஆனின் சட்டங்கள் !

ஆண்களுக்குத்தான்
கடுமையானது!

பெண்களுக்கோ
மென்மையானது!

இதனையறியாமல்
ஊரு,உலகம்
என்னன்னமோ பேசுது.!
-----------------------
ஓர் உயிரின்
உன்னதம் புரிய..!

அதற்கு படித்திருக்கனும்
இறைமறையை.!
---------------------
 

Sunday 13 July 2014

கழுதைக்குப் பேரு..!!!?

கிராமங்களில்
ஓர் சொல்லாடல் உண்டு!

"கழுதைக்குப் பேரு
முத்து மாணிக்கமா.!?" என்று!

அதுப்போலத்தான்
இருக்கிறது!

இரக்கமில்லாமல்
கொலைகள் நடத்தும்
இக்காலக்கட்டத்தை !

அறிவியல் காலகட்டமாக
சொல்வது !

      

Saturday 12 July 2014

குர்ஆன்பற்றிய கவிதைகள்..!!( 7)

அடுத்தது பெண்ணாக
இருக்கமோ என
கலக்கம் இருக்காது!

அடுத்ததும்
பெண்ணாக வேண்டும் என
ஆசை இருக்கும்!

பெண்ணின் மேன்மையைப்பற்றி
குர்ஆன் சொல்லிருப்பதை
அறிந்திருந்தால் .!
--------------------------
பெண்களுக்கு
ஓட்டு உரிமை கிடைத்தது
கடந்த நூற்றாண்டிலே!

அதனை
சாதனையென
சிலாகிப்பவர்களே!

பதினான்கு நூற்றாண்டுக்கு முன்னரே
சொத்துரிமை கொடுக்கச் சொல்லிருக்கு
குர்ஆனிலே!

அதனை
எப்போதுதான் உணர்வீர்களோ..!?
-----------------------\--------------
ஐந்து பெண்பிள்ளை பிறந்தால்
அரசனும் ஆண்டியாவான் என
சொல்லுவாங்க!

குர்ஆன் சொல்லும்படி
திருமணம் நடந்தால் !

மகள்களை பெத்தவர்
"பிச்சாதிபதியாக" இருந்தாலும்
லட்சாதிபதியாக ஆகிடுவாருங்க.!!
-------------------------------
பெண்களை போகப்பொருளாக
எண்ணும் மூடர்களே!

குர்ஆன் சொல்வதை
படித்துப்பாருங்கள்!

அதன் பின்
பெண்களை
உங்கள் இதயத்துண்டாக
பாதுகாப்பீர்கள்!
-----------------------------

கோரப்பற்கள்!

வெடித்துச் சிதறிய
உடல்களில் தெரிகிறது!

கொலைவெறி நாய்களின்
கோரப்பற்கள்!

      

குர்ஆன்பற்றிய கவிதைகள்..!! (6)

தன்
தாயையோ
தாரத்தையோ..!

தன்
பெண்மக்களையோ..!!

கிஞ்சிற்றும்
வெறுக்கமாட்டார்கள்!

இறைவசனங்களை
நேசிப்பவர்கள் !
------------------
நான் செய்யும்
தவறுகளுக்கெல்லாம்
நானே பொறுப்பு !

ஆனால்
நான் ஓர் தூசியளவு
நற்செயல் செய்தாலோ.!?

அது
இறைமறை
எனக்குள் ஏற்படுத்திய
பாதிப்பு.!
-------------------------
அநியாயக்காரர்களிடம்
அடங்கி போக மாட்டார்கள் !

ஆனாலும்
அநியாயக்காரர்களிடமும்
அப்பாவிகளிடமும்
அத்துமீற மாட்டார்கள் !

அவர்கள்தான்
குர்ஆனின் வசனங்களை
படித்து புரிந்தவர்கள் !
---------------------------
மன்னாதி மன்னரும்
துறவிப்போல் வாழ்வார் !

மண் வீட்டுக்காரரும்
செல்வந்த மனநிலையில் வாழ்வார்!

குர்ஆனின் வசனங்கள்
மனதில் செய்யும் மாற்றங்கள்
பலவுண்டு!

மேலே குறிப்பிட்டது
அதிலொன்று.!
-------------------------
   

Friday 11 July 2014

தரங்கெட்டவர்கள்!

பச்சிளம் குழந்தைகள் மீது
ஆயுதத்தை பிரயோகிப்பவர்கள்!

அஞ்சி அஞ்சி வாழும்
கோழைகள் விட!

தரங்கெட்ட கோழைகள் !

      

Thursday 10 July 2014

குர்ஆனைப்பற்றிய கவிதைகள்..!! (5)

எத்தனையோ புத்தகங்கள்
உங்கள் மனதை தொட்டு
இருக்கலாம் !

குர்ஆனைப் படித்துப்பாருங்கள்
உங்கள் ஆழ்மனதை தட்டுவதை
உணரலாம் !
-----------------------------
உறவுகளால்
உதறி எறியப்பட்டவரா..!?
நீங்கள்.!?

இறைமறையை
படித்துப்பாருங்கள்!

வெறுத்தவர்களையும்
நேசிக்க ஆரம்பித்து விடுவீர்கள் !
--------------------------------
குர்ஆன் !
கோழைக்குள்
வீரத்தை விதைக்கும்!

அவ்வீரத்திற்குள்ளோ
இரக்கமே மிகைத்திருக்கும்!
-----------------------------
இறைவசனங்கள்!
மூர்க்கமானவர்களையும்
முரடர்களையும்
மனிதர்களாக மாற்றி இருக்கு!

அவ்வரிசையில்
நானும் ஒருவன் என
சொல்லிட
எனக்கென்ன தயக்கம் இருக்கு..!?
-------------------------------

       

Wednesday 9 July 2014

ரமழான் ..!!

தாயின் அரவணைப்பில்
துயில்கொள்ளும்போது!

தொட்டிலில் போட செல்கையில்
சிணுங்கி அழும் குழந்தையைப்போல்!

ரமழான் கடக்கிறது என
எண்ணுகையில்!

மனதும் கலங்கதான் செய்கிறது
அக்குழந்தையைப்போல்!

     

Tuesday 8 July 2014

இறை நினைவில் சில வரிகள்.!


இறைவா..!!
எப்படிப்பட்டவர்களிடமும்
பணிந்து நடக்கும்
உள்ளத்தையும்!

உன்னையன்றி
எப்பேர்ப்பட்டவர்களிடமும்
அடிபணிந்திடாத
நெஞ்சுரத்தையும்
எங்களுக்கு தந்தருள்வாயாக..!!
---------------------------
 இறைவா..!!

கருவறையில்
எங்களை பாதுகாத்த
 ரஹ்மானே!

மண்ணறையிலும்
எங்களை பாதுகாத்திடு
எங்கள் இறையோனே..!!
 --------------------
இறைவா..!!

ஆயிரக்கணக்கில்
வார்த்தைகளை எழுதுகிறேன்!

ஓர் புள்ளியாவது
உன் திருப்பொருத்தமடைய வேண்டி
ஏங்குகிறேன்!

எங்கள்
சிந்தனையை சீராக்கு!

எங்கள்
எழுத்துக்களை நேராக்கு!
---------------------------
இறைவா..!

நீ கொடுத்த அறிவைக்கொண்டே
நான் உன்னை புகழ்கிறேன்!

உன்னால் பெற்ற அறிவிற்கு
நன்றி செலுத்த முடியாமல் உழலுகிறேன்!

இறைவா..!!
நீயே நிலையானவன்!

நீயே எங்களது பாதுகாவலன்!
---------------------------

இறைவா..!!

இரவையும் பகலையும்
படைத்தாய்!

அதற்கு விளக்காக
சூரியனையும் சந்திரனையும்
வைத்தாய்!

அதுப்போன்றே
நன்மை தீமை கலந்த
இவ்வுலகில் மனித சமூகத்தை படைத்திருக்கிறாய்!

நல்லது கெட்டதையறிய
உனது மொழியையும் {குர்ஆன்}
நபிகளாரின் வழியையும் வைத்தே இருக்கிறாய்!

இறைவா..!!
எங்களது உள்ளத்தை
சத்தியத்தில் நிலைப்படுத்துவாயாக!

அசிங்கத்தில் விழுந்திடாமல்
காப்பாற்றுவாயாக!
--------------------

இறைவா..!

இப்படிதான்
பயணிக்கனும் என
பயணிக்கிறேன்!

எப்படி மாறும்
பயணம் என்பதை
அறியாதவன் நானே!

மாறுவதால்
கலக்கம் எனக்கில்லை!

உன் கோபத்திற்கு
ஆளாகிட கூடாதே என்ற அஞ்சத்தில்
கண்ணீர் வடிப்பதை தவிர வேறு வழியில்லை!

உனது  அருளை எங்கள் மீது பொழியச்செய்வாயாக!

உனது பொறுமைக்குள்
எங்களை புகுந்திடச்செய்வாயாக!!
------------------------------------

குர்ஆன் பற்றிய கவிதைகள்..!! {4}

குர் ஆனின் வரிகள்
நபிகளாரின் வாக்கல்ல!

நபிகளின் வழியாக வந்த
இறைவனின் வாக்கு!
----------------------
சிந்தித்து அறிய கூடிய மக்களுக்கு 
பல அத்தாட்சிகள் இக்குர்ஆனில்
உள்ளது!

இக்குர்ஆனை படித்திடத்தான்
நம்மில் எத்தனை உள்ளங்கள்
தயாராக உள்ளது.!?
------------------------------
ஆழ்கடலிலும் மூழ்கிடாத 
கட்டுமரங்களைப்போல்!

இறைவசனங்களை நெஞ்சில் தாங்குபவர்கள்
யார் முன்பும் தாழ்த்துப்போவதில்லை!
--------------------------------
குர்ஆன் 
மானுடத்தை பார்த்து
அதிகம் கேட்கும் கேள்வி!

"சிந்திக்க மாட்டாயா..!?
சிந்திக்க மாட்டாயா..!? -என்று!"

ஓ!
மானுடமே!
சிந்திக்கச் சொல்வதாலா.!?
குர்ஆனை படிக்க மறுக்கிறாய்.!?
-----------------------------------   
    
      

Monday 7 July 2014

இறையச்சம்.!

எண்ணெய் இன்றி
தீபங்கள் ஒளிர்வதில்லை!

ஆனால்
நோன்பு மாதத்திலோ.!

உணவில்லாத
இரைப்பையிலிருந்து!

இறையச்சம் எனும்
ஒளி வீசுகிறது!

உள்ளம் வெளிச்சம்
பெறுகிறது!

   

Sunday 6 July 2014

இறையோனே..!!

இறைவா!

எங்களது
வார்த்தைகளையும் !
எழுதுதலையும்!

பாதையையும்!
பயணத்தையும் !

வாசிப்பையும்!
நேசிப்பையும்!

ஏக்கத்தையும்!
நோக்கத்தையும் !

உணர்வுகளையும்
உணர்ச்சிகளையும் !

உறவு கொண்டாடுதலையும்!
பிரிவு கொள்வதையும் !

ஆவேசத்தையும்!
பொறுமையையும்!

இளமையையும்!
முதுமையையும்!

வாழ்தலையும்!
மரணித்தலையும்!

இறைவா!
எங்களது
அத்தனை நிலைகளிலும் !

உனக்கு
பொருத்தமானதாக ஆக்கிடுவாயாக!

நீ!
எங்களை பொருந்திக்கொள்வாயாக!

அன்பாளனே!
அருளாளனே!

உன்னையன்றி
எங்களது பாதுகாவலன்
யாரிருக்கா..!?
இறையோனே!

   

Saturday 5 July 2014

குர்ஆனைப்பற்றிய கவிதைகள்...!!(3)

சோதனையின்போது
தலை கவிழ்ந்திட மாட்டார்கள் !

சாதிக்கும்போது
நெஞ்சை நிமிர்த்திட மாட்டார்கள் !

யார் அவர்கள் !?

அவர்கள்தான் !

குர்ஆனின்
வசனங்களைப் படித்தவர்கள்!

படித்து உணர்ந்தவர்கள்!
----------------------------
குர்ஆனின் வசனங்கள்!

அடிமைத்தனத்தையும்
ஆதிக்க எண்ணத்தையும்
ஆட்டங்காண செய்வது!

ஆதலால்தான்
ஆதரவும் எதிர்ப்பும்
நிரந்தரமானது!
-------------------------
குர்ஆன் என்பது
ஆன்மீகப்பெட்டகம் மட்டுமல்ல!

அறிவியலின்
சுரங்கமும் கூட!

படித்தால்
உணரலாம் !

தயக்கமின்றி
தமிழாக்கத்திலும் படிக்கலாம் !
--------------------------------
ஓ!
மானுட சமூகமே!

பிறப்பிற்கு முன்னாலும்
இறப்பிற்குப் பின்னாலும்
நம் நிலை என்ன..!?

விடை கிடைக்க
ஒருமுறையாவது குர்ஆனை
 படித்தால்தான் என்ன.!?
---------------------------

தகுதி..!!

வலிகளைத் தாங்க
வலிமை இல்லாதவன் !

வெற்றிகளை ஏற்பதற்கு
தகுதி இல்லாதவன் !

       

Friday 4 July 2014

வெற்றிப்பூக்கள்..!!

கொடும் வெயிலில்
பழுத்திடும்
பேரீச்சம்பழத்தைப்போல்!

வேதனையின் அனலில்தான்
வெற்றிப்பூக்கள் மலர்கிறது!

     

சரிந்த கட்டிடம்.!

மனிதம் சிதைந்த
மனிதர்களால்!

சரிந்த கட்டிடத்திற்குள்
புதைந்துப்போனார்கள்
மனிதர்கள்!

  

Thursday 3 July 2014

குர்ஆன் பற்றிய கவிதைகள் {2}

கடல்தனை
கரையிலிருந்தும்
ரசிக்கலாம் !

விருப்பபட்டால்
கடலோடு பயணிக்கலாம் !

அதனை தவிர்த்து விட்டு
கடலை திரையிட்டு
மறைக்கலாகுமா..!?

கடலைப்போலவேதான்
திருக்குர்ஆனும் !
-----------------
மாம்பழத்தினை
மண்பானைக்குள்
ஒளித்து வைத்தாலும்!

அறை முழுக்க
மணக்கத்தான் செய்யும்!

அதுபோலவே
இத்திருமறையினை
அவதூறுகளால் மறைக்க முயல்கிறார்கள் !

ஆனாலும்
உலகமெங்கும்
"சத்திய வாசம்"வீசவே செய்கிறது!
---------------------------------
மெய்ஞ்ஞானம்!
விஞ்ஞானம் !

இவைகளின்
இருப்பிடம்!

படித்திராதவர்கள்
ஒரு முறையாவது
படித்துப்பார்த்தால்
உண்மை புலப்படும் !
-------------------
ஆயிரத்து நானூறு
ஆண்டுகள் மேலாகியும் !
ஓர் எழுத்துக்கூட
மாறவில்லை !

இனி எத்தனை
ஆயிரம் ஆண்டுகளானாலும்
ஓர் புள்ளிக்கூட
கூடிட போவதில்லை !

அதிசயம்தான்!
ஆச்சரியம்தான்!

சத்தியமாக
இது இறைவேதம்தான்!
------------------------

Wednesday 2 July 2014

திண்டாட்டம்!

எதை தொட!?
எதை விட!? என!

என்னைத் திண்டாட செய்வது
உணவு பதார்த்தங்கள் மட்டுமா!?

புத்தகங்களும்தான்!

     

Tuesday 1 July 2014

குர்ஆனை பற்றி கவிதைகள்! (1)

ஓர் துளி மட்டும் 
கடலில்லை!

ஆனாலும் 
ஓரு வேதமான திருக்குர்ஆன்
ஞானக்கடல் என்பது பொய்யில்லை!

சிந்தனையாளர்கள் 
இதனை படிப்பார்கள்!

அல்லது!

இக்குர்ஆனைப் படிப்பவர்கள் 
சிந்திக்க தொடங்குவார்கள் !
---------------------------
குர்ஆன் பிரதிகளனைத்தையும்
பதுக்கி வைத்தாலும் !

சில மணித்துளிகளின்
மற்றொரு பிரதி கிடைத்துவிடும் !

ஏனென்றால் 
குர்ஆன் காகிதங்களில்
வாழவில்லை !

மனித மனங்களில்
வாழ்கிறது!
------------------
தொட்டால் 
தீட்டு இல்லை!

படித்தால் 
பாவமில்லை!

திருக்குர்ஆன் எனும் 
இறைவேதம்!
யாருக்கும் பரம்பரை 
சொத்தும் இல்லை!

அந்த இறைமறை!
உலக பொதுமறை !
--------------------
மனிதர்கள் அனைவரும்
ஓர் ஆண் பெண்ணிலிருந்து வந்தவர்கள்!
இறைமறையின் கூற்று!

இதனாலேயே எதிர்க்கிறார்கள்
பிறப்பைச்சொல்லி மக்களைப்பிரிக்கும்
கூட்டமொன்று.!!
-------------------------------------