Wednesday 4 December 2013

வெள்ளாடு..! (சிறு கதை)

                இரவு மணி 10.47 .
அந்த  ரயில் நிலையம் பரபரப்பாக இருந்தது.பயணிகளை அனுப்புவதற்கு வந்தவர்களும் ,பயணத்திலிருந்தவர்களும் தனக்கு தேவையானவற்றை கடைகளில் வாங்கி கொண்டிருந்ததால் ,மக்கள் நிரம்பி இருந்தார்கள்.சிலரோ பேரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தார்கள்.சிலர் ரயில் சன்னல் வழியாக ஆலோசனை சொன்னார்கள்.வெத்தலை எச்சியும்,பான்பராக் ,குட்கா  போன்றவைகளும்  நடை பாதையை கொலை பாதையாக மாற்றி இருந்தது.

            அக்கூட்டத்திலொருவன் படபடப்புடன் நின்று கொண்டிருந்தான் .நல்ல உயரம்.இரண்டொரு நாட்களுக்கு முன் செய்யப்பட்ட முக சவரம்.
ஜீன்ஸ் பேண்டும்," இன் " செய்த சட்டையும் ,அவனை படித்தவன் போலும், அழகானவனாகவும் காட்சி தந்தது.தனது கைகடிகாரத்தையும், பாதையையும் பதட்டத்துடன் பார்த்திருந்தான்."இன்னும் சிறிது நேரத்தில் யமுனை எக்ஸ்பிரஸ் கிளம்ப உள்ளது"-என கரகரத்த ஒலிபெருக்கியில் குயிலொன்று கூவியது.இவனுக்கு நேரம் குறைய, குறைய,உயிர் நழுவிடுவதுபோல் இருந்தது.பாதையை பார்த்து கொண்டிருந்தவனுக்கு,சந்தோசம் மேலிட்டது.ஆம் எதிர்பார்த்தது வந்தது.

        விளக்கின் வெளிச்சத்தில் ஒரு இளம்பெண் வேகமாக ஓடி வந்தாள்.ரயிலை தவற விடக்கூடாது என்ற எண்ணம் மேலாட.இவனும் அவளை நோக்கி ஓடி  ,கைபையை வாங்கி கொண்டு ரயிலை அடைந்தார்கள்.தங்களது இருக்கையில் அமர்ந்தார்கள். ரயில் புறப்பட சரியாக இருந்தது

                 அவர்கள் இருக்கை முதல் வகுப்பானது.நான்கு பேர்கள் பயணம் செய்வது.ஆனால் இருவர் மட்டுமே இருந்தார்கள்.வேறு யாரும் வரவில்லை போலும்.மூச்சிரைக்க  அவள் இருந்தால்,எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த அவன் எழுந்து,அவளது அருகில் அமர்ந்து கொண்டே கேட்டான்.
     "ஏன்டா ..!!செல்லம் லேட்டு..!?-அவன்.

      "இல்லப்பா..!வீட்ல எல்லோரும் தூங்க கொஞ்சம் நேரம் ஆயிருச்சி...!அவள்.

    "எல்லாம்,அவங்களாலதான் .,அவுங்க நம்ம காதலை ஏற்று இருந்தால்.,நாம ஏன் இந்த முடிவுக்கு வரணும்..!?-அவன்.

"ம்ம்ம்..!,என்றாள் கண்கள் கலங்கி கொண்டவளாக.!

"ஏய்..!அழாதடா..!!நானிருக்கேன்ல .,எல்லாம் கொஞ்ச நாள்ல அவுகளே நம்மள கூப்புடுவாங்க பாரு...!?-என்றான்.அவளை மாரில் சாய்த்து கொண்டு.தலை முடியை கோதி விட்டு.

              குளிர்சாதன அறை .பயண சீட்டை சரிபார்ப்பவர் வந்தார்.சரி பார்த்து விட்டு சென்று விட்டார்.அறையை பூட்டி கொண்டார்கள்.
            
அவர்களின் -                        
இளமை.
அறையிருந்த -
குளுமை.
கிடைத்த -
தனிமை.
உண்டாக்கியது -
சபலம்தனை.

ரயில் எல்லையை (அடுத்த நிலையம்)நோக்கி பயணித்தது.இவர்கள் "எல்லை மீறி"பயணித்தார்கள்.

          காலை மணி எட்டு ,ஆறு நிமிடம் .ரயில் மாநகரத்தை அடைந்தது.பயணிகள் இறங்கினார்கள்.அந்த இளம் ஜோடிகளும்தான்.ரயில் நிலையத்தை கடந்து வெளியில் வந்தார்கள்.அப்போது..

"டேய்.!மாப்ள..!என அவனின் நண்பர்கள் கூட்டம்.

நலம் விசாரித்து கொண்டார்கள்.திட்டத்தை சொன்னார்கள்.இவன் நண்பனின் பைக்கில் ஏறி "சாமான்கள்"வாங்கி வருகிறேன் என கிளம்பினான்.

         அவள் மற்றொரு நண்பனோடு ஆட்டோவில் பயணித்தாள்.வேகத்தடையில் ஆட்டோ ஏறி இறங்கியது.வலது பக்கமாக வளைந்து சென்றது.அப்போது ஒரு "குட்டி யானை"எனும் வாகனத்தில் வெள்ளாடுகள் ஏற்றப்பட்டு சென்றது.அவள் பதைபதைப்புடன் அதனை பார்த்தாள்."அறுபட போகிறதே "என எண்ணி.

        மனதுக்குள் குதூகலித்தாள் .மண வாழ்வு அமைவதை எண்ணி கொண்டு.பாவம் இவள் ,போனவன் வர போவதில்லை .இவள் வாழ்வு இனிக்க போவதும் இல்லை.ஆடுகள் மேல் பரிதாபம் கொண்டவள்.தானும் அந்நிலையில் பயணிப்பதை அறியாதிருந்தாள்.ஆம் ,அவளுடன் பயணிப்பது விபசார புரோக்கர்.தற்போதுதான் "இப்பண்டத்தை" வாங்கி செல்கிறான்.....!!

2 comments:

  1. இன்றைக்கு நடக்கும் கொடுமை...

    ReplyDelete
  2. காதல் மோகத்தில் சிக்கிக்கொள்ளும் பல வெள்ளாடுகள்......

    கொடுமை தான்....

    ReplyDelete